ஆண்டாள்-06

 ஆண்டாள்-06


மார்கழி மாதம் சைவர்கள் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்பாவை படிப்பதும் நம் மண்ணில் தொன்றுதொட்டு நடந்துவரும் ஒரு தொன்மையான நிகழ்வு. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் முப்பது பாக்கள் இருக்கின்றன. இறைவனோடு உயிர்கலந்து தான் மணந்து கொள்வதையே ஆண்டாள் கற்பனையாய் உணர்ச்சிமிகுதியாய் பாடிப்பார். கடவுள் நெறியில் ஈடுபடுவோர்க்கு காதல் நெறியில் உயிர்கள் செல்ல இயலாது என்பது சிலர் கூற்று, ஆனால் இதை பொய்ப்பிக்கிறது ஆழ்வார்களின் கூற்று, ஆண்டாளுடைய பெருமை அளவுகடந்தது, இறைவனுக்கு பணிபூண்ட ஆழ்வார்கள் பன்னிருவரில் பெண்பாலினத்தை சேர்ந்தவர் ஆண்டாள் ஒருவரே. அதுமட்டுமின்றி இறைவனின் தேவியருள் ஒருவராய் வைத்து போற்த்தக்கவர்.ஆழ்வாராய் இருந்து பாமாலை சூட்டியும், தேவியாய் இருந்து பூமாலை சூட்டிய அனுபவமும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவள் ஆண்டாள் மட்டுமே! ஆகவே பூர்வாச்சாரியார்கள் இருடிகளும், ஆழ்வார்களும் எத்தனை வாசியோ, அத்தனை வாசி ஆழ்வார்களும் ஆண்டாளுக்கே என்று போற்றினர்.


"பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், ஆண்டாள் பிறந்த 

திருவாடிப்பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு 

உண்டோ மனமே உணர்ந்துபார், ஆண்டாளுக்கு

உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு."


மணவாளமாமுனிகள் இயற்றிய உபதேசரத்தினமாலை இதனை உணர்ந்து உணர்த்துகிறது.


 தென்பாண்டி நாட்டு பதினெண் திருப்பதிகளில் எட்டாவதாய் அமைந்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வார், எம்பெருமான் திருமாலுக்கு தினமும் பூஜிக்க நந்தவனம் ஒன்றை ஏற்ப்படுத்தியிருந்தார், ஒருநாள் அந்நந்தவனத்தில் அழகிய பச்சிளம் பெண்மகவு ஒன்றை கண்டார். கி.பி 715 ல் ஆண்டாள் தோன்றியதாய் மு.ராகவையங்கார் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது ஆதாரங்கள் நிறைந்த கூற்று பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட கருத்து. ஆனால் குருபரம்பரையில் இவர்தோன்றிய மாதமும், நட்சத்திரமும் அன்றி வேறு குறிப்புகள் இல்லை. இவரது இயற்பெயர் "சுரும்பார் குழற்கோதை" என்பதாகும். தான் சூடிக்களைந்த மலரை இறைவனுக்கு சூடியதால் "சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்" எனும் பெயரும் "சூடிக்கொடுத்த நாச்சியார் ","சூடிக்கொடுத்த பொற்கிளி" எனும் பெயரும் இவருக்கு உண்டு. ஆண்டாள் எனும் பெயர் இவருக்கு எதன்பொருட்டு வந்தது என்ற காரணம் அறியவில்லை. இறைவனின் தேவியாய் விளங்கியதால் "ஆண்டாள்" எனும் பெயர் ஒருங்கால் ஏற்ப்பட்டிருக்கக்கூடும்.


தன்மகளின் குழந்தைப்பருவத்தின் அழகை பெரியாழ்வாரின் திருமொழியில் அழகுபட வர்ணிக்கிறார் பெரியாழ்வார்.


"ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் 

      பேச்சும் அலந்தலையாய்ச் 

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் 

      உடுக்கவும் வல்லள் அல்லள் 

கையினில் சிறுதூதை யோடு இவள் 

      முற்றில் பிரிந்தும் இலள் 

பை அரவணைப் பள்ளியானொடு 

      கைவைத்து இவள்வருமே"


கோதை சின்னஞ்சிறுமியாய் சிற்றாடை கட்டி, மழலை மாறாமல் கேளிக்கைவிளையாட்டுகளில் ஈடுபட்டதையும், பதுமை வைத்து, மண்சோறுசமைத்து அதனை அனைவருக்கும் பகிர்ந்தளித்தமை, சிற்றில்லம் கட்டி விளையாடுகையில் அரங்கனுக்கும் தனிஅறை அமைத்து விளையாடியது,அந்த அறையில் அரங்கன் அமர்ந்தது, அவருடைய வில், சங்கு, போன்ற ஆயுதங்களை ஆண்டாள் வரைந்தது போன்றவற்றை வியந்து பெரியாழ்வார் போற்றுகிறார்.

இதனை


பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் 

      முற்றத்து இழைக்கலுறில் 

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் 

      அல்லது இழைக்கலுறாள் 

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில 

      கோவிந்தனோடு இவளைச் 

சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும் 

      தட்டுளுப்பு ஆகின்றதே    


என்கிறார்.


பெதுமை பருவத்தில் ஆண்டாள்:


குழந்தையாய் இருந்த பேதைப்பருவம் ஒருநாள் பெதுமை பருவம் எய்தி குமரியாகிறார்(இனிமேல் இவரை அவர் என அழைப்போம்) ஆண்டாள், தந்தையுடனே வனத்தில் தங்கி, செடிகளுக்கு நீரூற்றி,  பூக்களை பறிக்கும் வேலையில் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்கிறார்,நாட்கள் செல்ல செல்ல மெல்ல கண்ணனின் உருவம் தன்மனக்கேதத்தில் உருவாவதை மெல்ல ஆண்டாள் உணர ஆரம்பிக்கிறார். கண்ணன் தனக்கானவன் என்று உரிமையுடன் உணர்கிறார்.எனவேதான் தன்தந்தை தினமும் நாதனுக்கு சூட்டும் மாலையை, தான் சூடி அதன்பின் தன் நாயகனுக்கு கொடுத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றி, அதனை ஒருநாள் நிறைவேற்றவும் செய்தார், பின் அதுவே வழமை ஆயிற்று! இச்செயல்களை பெரியாழ்வார் அறிந்திருக்கவில்லை, கோவிலில் அர்ச்சகர் இவ்விடயத்தை அறிவார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை புதிய தெய்வீக மணமாகவும், வாடாமலும் இருப்பதைகண்டு இது பெரியாழ்வாரின் அற்புதம் போலும் என இடர்தெரிவிக்காமல் இருந்தார். இதற்கு முடிவும் ஒருநாள் வந்தது. தன்தந்தை வந்ததை மறந்து மாலைசூடி தன் நாதனையே நினைத்து மெய்மறந்தார். இந்நிகழ்வை கண்டு கடுஞ்சினங்கொண்டார் பெரியாழ்வார். இறைவனின் பெருமைகளை எடுத்து கூறி, இனியும் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என சினம்தனிந்தபின் கூறினார். கோதைக்கும் அதுவே சரியெனபட்டது. ஆழ்வார் தம் மகள் சூடிய மாலையை நாதனுக்கு சூட்ட விரும்பாது, புதியமாலையை கோர்த்து சூட்டினார். ஆனால் மாலையில் ஏதோ குறை இருப்பதை உணர்ந்தார். இதே எண்ணத்தோடு நீண்டநேரம் தம்மகள் செய்த காரியத்தை நினைத்தவாறே வருத்தம் கொண்டார். சிறிது நேரம் தன்னை மறந்து கண்ணயர்ந்தார். அச்சமம் திருமால் கனவில் தோன்றி, "என்ன ஆழ்வாரே இன்று மணமேயில்லாத இல்லாத மாலையை சூட்டி விட்டீரே, என வினவ பதில் அளிக்க தெரியாமல் திகைக்கிறார் ஆழ்வார், "இனி ஆண்டாள் சூடிய மாலையே வேண்டும் "என கூறி மறைகிறார்.அவ்வாறே மறுநாள் செய்தார், தம்மகள் திருமாலின் தேவிதான் என்ற எண்ணம் தோன்றியது ஆழ்வாருக்கு.தம் மகளின் தெய்வீகத்தன்மையை எண்ணி உவகை கொண்டு, ஆனந்த கூத்தாடினார்.ஊரெல்லாம் இச்செய்தி பரவி, கோதையாள் "சூடிக்கொடுத்த சுடர்கொடி" ஆனார். அன்றுமுதல் பெரியாழ்வார் "தொடைசூடி கொடுத்தாளைத் தொழுமப்பன்" எனப்பட்டார். நாள்தோரும் தம்கனவில் தம் மனக்கேதத்தை ஒருநாள் ஆண்டாள் தகப்பனிடம் கூறினார்.


ஆண்டாளின் ஆசையை கேட்டு பெரியாழ்வாரின் நிலையையும், அவர் பாடிய பாசுரங்களையும், ஆண்டாள் திருப்பாவையையும் நாளை காண்போம்.   







No comments:

Post a Comment

திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

  திருமங்கையாழ்வார்-07 திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்: உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பத...