திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

 திருமங்கையாழ்வார்-07


திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்:


உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பதையே உலகின் அனைத்து மதங்களின் நெறியாய் உள்ளது. திருமங்கையாழ்வார் தான் இறையருள் பெரும் முன்னர் வழிப்பறி செய்தும், உயிர்களை துன்புறுத்தியும் இரவில் ஓர் வாழ்க்கையும், பகலிலே பக்திமானாகவும் இருவாழ்க்கை வாழ்ந்தார். இறைவன் தன்னை தடுத்தாட்கொண்ட பின், தனது பழைய வாழ்க்கையை எண்ணி வருந்தி கீழ்க்கண்டவாறு பாடுகிறார்,


"கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் 

கண்டவா திரிதந்தேனேலும் 

தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் 

சிக்கெனத் திருவருள் பெற்றேன் 

உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் 

உடம்பு எலாம் கண்ண நீர் சோர 

நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் 

நாராயணா என்னும் நாமம்"


இவ்வரிகளை ஆய்ந்தால் இதற்குமுன் தான்புரிந்த கொலைகள் மற்றும் நெறிகெட்டவாழ்க்கையை எண்ணி மனம் வருந்தியது புலப்படும்.


மனிதன் நன்னெறிகளை கடைபிடிக்கவெனில், அவன் பிறப்பு, இறப்பு எனும் சக்கரத்தில் உழவேண்டும்,ஆனால் இவ்வாழ்வார் இந்த சக்கரத்தில் விழாது இறைவனிடம் பக்தி கொண்டமையை,


“சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்

காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்

ஓதல் செய் நான்மறை ஆகி, உம்பர்

ஆதல் செய் மூவுருவானவனே"


என்ற தம் பெரியதிருமொழியில் கூறுகிறார்.


வெற்றியும், தோல்வியும் மனிதவாழ்க்கையில் மாறிமாறிவரும், எனவே எந்நிலையிலும் சமநிலையில் இருக்கவேண்டும்,எனவே தம் மனதினை இறைவனிடத்தே ஒப்படைத்தால் அனைத்தும் அவன்செயல் எனும் தெளிவு உண்டாகும் என்பதனை,


"பரம நின் அடியினை பணிவன்,

வருமிடர் அகல -மாற்றோ வினையே"


இறைவனை தொழுபவர்க்கு தீவினை, நல்வினை எதுவும் சேராது என்கிறார்.


இவருடைய பெரியதிருமொழிக்கு தனியன் பாடிய ஆழ்வான், 


"நெஞ்சுக் கிருள்கடி தீப மடங்கா நெடும்பிறவி

நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழநன் னூல்துறைகள்

அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம்,பரசமயப்

பஞ்சுக் கனலின் பொறிபர காலன் பனுவல்களே"


எனப்பாடும் பாடலை சற்று ஆராய்ந்தால், திருமொழியின் புகழ் மனிதனின் அறியாமையை போற்றும் அகல் போன்றது என்றும், பிறவாமையை தந்து இறைவனை அடையும் வழியென்றும், தமிழ் இலக்கியங்களில் எழுத்து, யாப்பு, சொல், பொருள், அணி, ஆகியவற்றை முறையாய் பெற்று விளங்கும் பேரிலக்கியம் என்கிறார்.


இவரது பாட்டமைப்புகளில் திருவேழுகூற்றிருக்கை என்பது மிகவும் கடினமான ஒன்று.இதனை திரு+ஏழு+கூற்று+ இருக்கை என பிரிப்பார்கள்,இவரின் கூற்றிருக்கை 46 அடிகள் கொண்டது, நிலைமண்டில ஆசிரியப்பா எனும் வகையை சேர்ந்தது.


ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து 

மங்கையர் இருவரும் 

மலரன அங்கையில் முப்பொழுதும் 

வருட அறிதுயில் அமர்ந்தனை, 

நெறிமுறை நால்வகை 

வருணமும் ஆயினை 

மேதகும் ஐம்பெரும் 

பூதமும் நீயே அறுபதம் 

முரலும் கூந்தல் காரணம், ஏழ்விடை 

அடங்கச் செற்றனை அறுவகைச் 

சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் 

ஓதியை ஆகத்து இருத்தினை அறமுதல் 

நான்கவையாய் 

மூர்த்தி மூன்றாய் 

இருவகைப் பயனாய் 

ஒன்றாய் விரிந்து 

நின்றனை. 


இவ்வாறு 1234567654321 என்று ஏற்ற இறக்கத்தில் அனாயாசமாகக் கவிதை புனைந்திருக்கிறார்.



திருமங்கையாழ்வார் பகுதி-02

 திருமங்கையாழ்வார்


பகுதி-02


பரகாலரின் வழிப்பறி:


சோழனின் கடனை அடைத்தபின், அடியாருக்கு தினமும் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் செய்து வந்ததனால் கையில் இருந்த இருப்பு மீண்டும் கரைய ஆரம்பித்தது. ஆழ்வாரின் மனது கலங்க ஆரம்பித்தது. அப்போதுதான் அந்த விபரீதஎண்ணம் மனதில் உதித்தது, வழிப்பறி செய்து அதில் கிடைக்கும் பணத்தினை கொண்டு அடியார்களின் பசியாற்றுவோம் என எண்ணினார். நீர்மேல்நடப்பான், நிழல்மேல்ஒதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரையும் துணைக்கு வைத்து களவாங்க ஆரம்பித்தார். பாதசாரிகளை தாக்கி அவர்களின் செல்வங்களை கொள்ளையடித்து வழக்கம்போல் பாகவதர்களுக்கு அன்னமிட்டு உபசரித்து மகிழ்ந்தார்.

நாள்தோறும் இவ்வாறே நடக்க, தான் செய்துவருவது தவறு என்பதே அவர் அறியாமல் வழமையாக தொடர்ந்தார். பரம்பொருளான திருமால் அவரை சோதிக்க எண்ணி ஒரு முறை பெருமாள் பிராட்டியுடன் மணக்கோலத்தில் வந்தார்.  ஆழ்வார் தன் படையினருடன் அந்தத் தம்பதிகளை மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டார். ஆனால் கால் அறுகாழியை(மெட்டி) மட்டும் பெருமாள் கழட்டவில்லை. ஆழ்வாரும் அறுகாழியைக் கழட்டும்படி மிரட்ட, “என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள்” என்றார்.


ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து அறுகாழியை இழுத்து எடுத்தார். “எம் கலியனோ?”  என்று பெருமாள் ஆழ்வரைப் பார்த்து வியந்தார். பின்பு தாம் கொள்ளைகொண்டவற்றைச் சுமையாகக் கட்டி எடுக்கப் பார்த்தார். சுமையை அசைக்கவே முடியவில்லை. பெருமாளை நோக்கி, “நீ ஏதோ மந்திரம் செய்துள்ளாய்; அது என்ன மந்திரம், சொல்?” என்று கேட்டார். பெருமாள் ஆழ்வாரை அருகே அழைத்து, அவர் செவியில் திருஎட்டெழுத்தாகிய திருமந்திரத்தை உபதேசித்து அவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை,  பரகாலர் கொள்ளையடித்து, அதன்பின் உபதேசம் பெற்ற சம்பவத்தை மையமாக வைத்து நடத்தப்படும் உற்சவத்துக்கு  “திருவேடுபறி” என்று பெயர், இன்றும் பல திவ்ய தேசங்களில் இந்நிகழ்வு நடைபெறுகிறது உதாரணம் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணியில் இது மிகப்பிரசித்தம்.

பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)

திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)

திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)

திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)

சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)

பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)

ஆக இவர் மொத்தம் ஆறு திவ்யப் பிரபந்தங்களில் 1253 பாசுரங்கள் அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தி உள்ளார், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இவர் முழுமையாக 1000 பாடல்களுக்கு மேல் பாசுரங்கள் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இவர் இயற்றிய பாசுரங்களின் சிறப்பான பகுதிகளை நாளை காண்போம். அவற்றில் ஒரு சிறு எடுத்துக்காட்டு,


ஒன்றிலிருந்து ஏழுவரை படிப்படியாய் ஏற்றி இறக்கி இயற்றப்படும் செய்யுள் "ஏழு கூற்றிருக்கை" எனப்படும். இதனை தேர்பந்தம் எனப்படும் சித்திரக்கவியாகவும் அமைத்து காட்டப்படும்,


இதனை திருமங்கையாழ்வார் பாடியுள்ளார், நாளை அவரது பதிகங்களின் சிறப்புகளை காண்போம்.




திருமங்கை ஆழ்வார் 07

 திருமங்கையாழ்வார்:07


பகுதி-01


"பொங்கு புகழ் மங்கையர்கோன் ஈந்த மறைஆயிரம் அனைத்தும் தங்கும் மனம்" என இராமானுஜர் திருமங்கையாழ்வாரை புகழ்ந்து பாடுகிறார். 1084 பாசுரங்களை இவர் பாடியுள்ளார். இவர் கி.பி 9ம் நூற்றாண்டில் சோழநாட்டில் திருவாழிநாட்டில் திருக்குறையாலூர் எனும் ஊரிலுள்ள ஆழிநாடன் என்ற சோழமன்னனின் முதன்மை தளபதிக்கும் அவர் மனைவி வல்லித்திருவிற்கும் மகனாய் தோன்றியவர் இவ்வாழ்வார். 

திருமங்கை ஆழ்வார் பிறக்கும் பொழுது கரிய நிறம் உடையவராய் இருந்ததால் பெற்றோர்கள் நீலன் என்னும் திருநாமம் சூட்டினார்.இவர் தந்தை இறந்தபின் சோழனுக்காக பல போர்களில் கலந்து வெற்றியை மன்னர் முன் சமர்ப்பித்தார், எனவே சோழன் இவருக்கு "பரகாலன்" எனும் பட்டமளித்து நீலனின் வீரத்தைப் போற்றி, அவரைத் திருவாலியின் குறுநில மன்னன் ஆக்கினார்.


குமுதவல்லியுடன் காதல்:


திருவெள்ளகுலம் எனும் நகரிலுள்ள பொய்கையில் "திருமாமகள்" எனும் பெயருடைய பெண்ணொருத்தி தாமரைமலரை கொய்துகொண்டிருந்தாள், அச்சமயம் அங்குவந்த வைஷ்ணவர் ஒருவர், அதனைகண்டு "பெண்ணே நீ யார்?" என வினவ, நான் ஒரு தேவமங்கை "சுமங்களை"என்பது என் பெயர், ஒருமுறை நான் என் தோழிகளுடன் சென்று குரூபியாய் இருந்த சித்தர் ஒருரை கேலி செய்தேன்.அச்சமயம் ஞானநூல்களை அத்யஞனம் செய்துகொண்டிருந்த கபிலாச்சாரியார் எனை கண்டு, அச்சித்தரின் மகிமையறியாத பேதை நீ, இனி மனிதஉருவெடுத்து மண்ணில் பிறப்பாய்! அதுமின்றி நீ ஒரு மிலேச்சனுக்கு மனைவியாவாய்! என கடுமையாய் சபித்தார். நான் காலில் விழுந்து மன்னிப்புகோரவே, மனமிறங்கி கொடுத்த சாபம் திருப்ப இயலாது, எனவே நீ திருவாழி நாட்டு மன்னனை திருத்தி வைணவராக்கினால் அவர்மூலம் நீ நற்கதியடைவாய்! இல்லையெனில் நீ நிர்மூலமாவாய்,அவர் சாதாரணமானவர் அல்லர், விஷ்ணுவின் ஆயுதமான சார்ங்கத்தின் அம்சமானவர்.அவரை மணந்து ஹரிபக்தனாக்கி சுகப்படுவாயாக, என அருளிச்சென்றார். என தன் கதையை கூற, அவள் கதையை கேட்ட அந்த வைஷ்ணவர், குழந்தைப்பேறு இல்லா தனக்கு பகவான் அழைத்த கொடை என அவளை அழைத்துச்சென்றார். அக்குழந்தையின் கதையினை தன் இல்லாளிடம் கூடி, "குமுதவல்லி" எனும் திருநாமமிட்டு வளர்த்தனர். அக்கன்னியும் பெதும்பை பருவமடைந்து, பக்தியால் ஊர்மெச்ச வாழ்ந்து வந்தாள், குமுதவல்லியின் புகழைகண்டு அவளை மணம் செய்ய திருநாங்கூரிலுள்ள அந்த வைஷ்ணவரின் இல்லத்துக்குச் சென்று, அவரது வளர்ப்புப் பெண்ணாகிய குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தர வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

 பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.


 ஆனால் குமுதவல்லியாரோ, ‘திருவிலச்சினையும், திருநாமமும் உள்ள வைணவனுக்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன்’ என்று மறுத்துரைத்தாள்.

மேலும் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மொழிந்தாள்.


இந்த இரண்டையும் செய்வதாக நீலரும் ஒப்புக் கொண்டார். அதன்படி அவரது முதல் கடனை முதலில் நிறைவு செய்தார்.


வைஷ்ணவரான நீலர்:


நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார்.

இறைவனையே குருவாகக் கொண்டு, அவர் மூலம் பஞ்சசம்ஸ்காரம் பெற்ற ஒரே வைணவர், நீலர்தான்.


அதன்பின் ஓர் நன்னாளிலே குமுதவல்லியாரை அவள் பெற்றோர் திருமங்கை மன்னருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதோர் நாளில் மணம் செய்து கொடுத்தார்கள்.

தம் மணவாட்டிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தினமும் ஆயிரம் பாகவதர்களை அழைத்து, அவர்களின் தேவையறிந்து பொருளுதவியும், அண்ணமும் அளித்துவந்தார். குன்றகுன்ற குன்றும் மாளும் என்தற்கேற்ப, அவரது செல்வமும் தீரஆரம்பித்தது, எனவே சோழமன்னருக்கு அளிக்கவேண்ட கப்பம் செலுத்தமுடியாமல் போய்விடுகிறது, நீலனின் வீரத்தை நன்கு அறிந்த சோழமன்னன், நீலனுடன் போரிட்டு வெல்லமுடியாது என்பதால், நீலனை தந்திரமாக அழைத்து ஒரு கோவிலில் சிறை வைத்தான். அங்கே உணவுகொள்ள விருப்பமில்லாது மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நீலனின் கனவில் அத்திகிரி அருளாளனான காஞ்சிப் பெருமாள் வரதராஜர் தோன்றினார்.

நீலரை காஞ்சிக்கு வருமாறு சொன்னார். வந்தால், அவர் பட்டிருக்கும் கடனைத் தீர்ப்பதாக அறிவித்தார்.

வரதராஜ பெருமாளின் ஆணையை அரசுக்குத் தெரிவித்தார் நீலன். பரகாலன் சத்தியம் தவறாதவர் என்பதை நன்கு உணர்ந்த அரசன், ஒரு சிறு குழுவை அவரோடு காஞ்சிக்கு அனுப்பி வைத்தார். அங்கே, மீண்டும் நீலன் கனவில் தோன்றிய காஞ்சி வரதன், புதையல் இருக்கும் இடத்தை காண்பித்துக் கொடுத்தார்.

அதன்படி, வேகவதி ஆற்றின் கரையில் தோண்டினார் அவர். பெரும் புதையலைக் கண்டெடுத்தார். அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தை செலுத்தினார். மீதம் இருந்ததை அன்னதானத்துக்கு எடுத்து வைத்தார். அடுத்து, திருமங்கை நாட்டின் விளைச்சலில், பேரரசுக்குச் சேர வேண்டிய நெல்லினைக் கேட்டனர், சோழ மன்னனின் அதிகாரிகள். நீலரோ, காஞ்சிப் பேரருளாளனின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, கண்ணை மூடிக்கொண்டபடியே, உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆற்று மணலைக் காட்டினார்.

என்ன ஆச்சர்யம்! அவர் காட்டிய இடமெல்லாம் மணல் துகள் அனைத்தும் நெல்மணிகளாயின! நீலனின் பெருமையை, தெய்வம் அவருக்குத் துணை நின்றதை அறிந்த அரசன், தன் தவறுக்கு வருந்தினான். அவர் திருமங்கை நாட்டை சுதந்திரமாக ஆள்வதற்கு வழிவிட்டான்.


எம்பெருமான் திருமாலுக்காக திருமங்கையாழ்வார் வழிப்பறி செய்ததையும், அவர்கால சமூக அமைப்பையும்,அவரது சிறப்பான பாசுரங்களையும் அடுத்தடுத்த பகுதியில் காண்போம்.



ஆண்டாள்: பகுதி 02

 ஆண்டாள்: பகுதி-02


"குன்றாடு கொழுமுகில் போல் குவளைகள் போல் குரைகடல் போல்

நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்

குன்றாடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி

மன்றூடு தென்றலுமாம் மதிள் அரங்கம் என்பதுவே"


குவளைமலர், மயில், கடல், மேகம் போன்றவற்றில் உறைந்திருக்கும் நீலநிறத்தினை உடையவர்,


(இந்த வருணனையை கொஞ்சம் பூசினாப்போல எழுதியதே, அலைபாயுதே திரைப்படத்தில் வரும் பச்சை நிறமே பாடல், அதில் ஒவ்வொரு வண்ணத்தை பற்றி கூறுகையில், நீலநிறம் வரும் பகுதியில் இப்பாடலை இன்றைக்கு ஏற்றவாறு மாற்றி கையாண்டிருப்பார் வைரமுத்து அவர்கள்,


"அலையில்லாத ஆழி வண்ணம்,

முகிலில்லாத வானின் வண்ணம்,

மயிலின் கழுத்தில் வாழும் வண்ணம்,

குவளைப் பூவில் குழைத்த வண்ணம்,

ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்,

எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்!

எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்")


அவ்வூர்களிலுள்ள குன்றின் வழியே (அநேகமாய் பொன்மலை, திருவெறும்பூர் உறையூர் சோழப்பாறையாய் இருக்கும்)சோழையினுள்ளே நுழைந்து, மெல்லிடைப்பெண்களின் மார்பை தொட்டு உலாவி மன்றத்தில் ஆடும் தென்றலும் மதில்களும் கொண்டது திருவரங்கம்,


இவ்வாறு தான் புகழ்ந்து பாசுரம் இயற்றிய எம்பெருமான் திருமாலையே தம்மகள் விருப்பத்தோடு தம் கணவனாய் கேட்க, செய்வதறியாது திகைத்தார் பெரியாழ்வர். நூற்றியெட்டு திருப்பதிகளிலும் எழுந்திருக்கும் உம் நாதன் யார், என வினவி, அத்துனை தலங்களிலும் உறையும் இறைவனை பற்றிபாடி, கிட்டத்தட்ட ஒரு சுயம்வரத்தையே நடத்தி முடித்தார். இறுதியாய் திருவரங்கன் பெருமையை கூற, கேட்கும்போதே உவகைகொண்டு திருவரங்கனையே எம் மணாளன் என கூறினார் ஆண்டாள். அன்று இரவு மீண்டும் அவர் கனவில் திருமால் மீண்டும் தோன்றி, "கவலைப்படாதீர்! உம்மகளை இங்கே அழைத்துவாரும்" என கூறிமறைந்தார். விஷயத்தை பாண்டிய மன்னனிடம் கூறி, மன்னன் ஏற்ப்பாட்டில் சோழதேசம் நோக்கி செம்பியர்கோனின் குலதெய்வம் காண, தம் மகளுடன் திருவரங்கம் சென்றார். தம் மகளை கைப்படித்து அழைத்து வந்த பெரியாழ்வாரை அனைவரும் வியப்புடன் கண்டு வழிவிட, நேரே கருவறை உள்ளே சென்ற ஆண்டாள், அரங்கனுடன் கருவறையில் கலந்தார். அதன்பின் மூவரும் பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். இது ஆண்டாளை பற்றி திவ்யசூரிசரிதம் கூறும் சுருக்க கதை, இதனையே ஆண்டாளின் பாடலும் எடுத்துறைக்கிறது. ஆண்டாளின் கதாபாத்திரத்தை கற்பனையென்றும், அவரது கற்பனையில் உருவான கற்பனைச்செல்வியே ஆண்டாள் என்றும், ஆண்டாள் இயற்றியதாய் கூறும் பாடல்கள் பெரியாழ்வார் இயற்றியதே என கூறுவோரும் உள்ளனர். காதலின் வேகத்தை கூறும் பெரியாழ்வாரின் திருமொழிப்பகுதியே பின்னாளில் நாச்சியார்திருமொழி ஆனது, கோதைநாச்சியார் என அவரை உண்மையான பெண்ணாகவே ஆக்கிவிட்டதாகவும் கருத்துரை உண்டு.


ஆனால் ஆண்டாளின் பாசுரங்களை ஆராய்ந்தால், பெண்ணால் மட்டுமே உணரமுடியும் சில விஷயங்களை காட்சிபடுத்தியிருப்பது புரியும்.பெரியாழ்வாரின் திருமொழி பாவனைக்கும், ஆண்டாளின் பாவனைக்கும் வித்தியாசத்தை நன்கு உணரமுடியும்.


ஆண்டாளின் பாசுரங்கள்:


திருப்பாவையை சற்று ஆழ்ந்து உணர்ந்தால் அதில் மார்கழிமாதத்தின் நீரோட்டத்தையும், மழையின் தேவையையும், பாவை நோன்பும் குறிப்பிடத்தக்கது.தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு குறித்து உள்ளது.பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியதாகும். இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பு தைந்நீராடலாய் குறிப்பிடப்படுகிறது.


நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.


"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே, நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்"


மார்கழிமாத நீராடலின் சிறப்பினை மேற்கண்ட பாடலில் ஆண்டாள் உணர்த்துகிறார்.


அற்புதமான விஞ்ஞான குறிப்பொன்றை போகிறபோக்கில் ஆண்டாள் பாடிவிட்டு போகிறார்.


"ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து

தாழாதே சார்ங்கம் தொடுத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தாலோர் எம்பாவாய்"


மழை தேவனே, நீ எப்படி மழை பெய்யவேண்டும் என்பதை ஆய்ச்சியர்களான நாங்கள் சொல்கிறோம். நீ முதலில் சமுத்திரத்துக்குச் செல். கரைகளிலிருந்து கால் நனைப்பதுபோல் அல்லாமல் ஆழமாகச் செல். முங்கி வேண்டுமட்டும் நீரைக் குடித்து, கறுத்த உடலாக மாறு. எப்படிப் பட்ட கறுப்பு தெரியுமா... ஊழிக்காலம் முதல் இருக்கும் அந்தக் கார்மேக வண்ணனைப் போல் மாறு.


இன்றைய மழைபொழியும் அறிவியல் சொன்னதை எளிதாய் தம் பாக்களில் ஆண்டாள் கூறுகிறார்.


"வானிடை வாழுமவ் வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்த அவி,

கானிடைத் திரிவதோர் நரி புகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,

ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

வாழகில்"


வேதம் ஓதுபவர்களால் வானுலகத்தில் வாழும் வானவர்க்கு என்று செய்த வேள்வியில் போடப்பட்ட பொருட்களை காட்டில்திரியும் நரி வந்து முகர்ந்து பார்ப்பது எவ்வளவு தகாத ஒன்றோ, அதைப் போல சங்கும் சக்கரமும் ஏந்திய உத்தமனுக்கென்றே படைக்கப்பட்ட என் ஊனும் உயிரும் பிறிதொரு மானிடனுக்கு இல்லை என்று ஆவேசமாய் கூறி உலகளந்த உத்தமனுக்கே என் உடம்பு அவனுக்கென்றே ஆனவை விம்மி எழுந்த என் பருத்த முலைகள்என் உடல் சாதாரண மனிதனுக்கென்று பேச்சு வந்தால் வாழவே மாட்டேன் மன்மதனே என்று பாடுகிறார் ஆண்டாள். தம் அழகு ஓர் சுமையாய் உள்ளது என பாடிய பல பெண்மணிகளை முன்பே இலக்கியங்களை கண்டுள்ளோம். உதாரணமாய் காரைக்கால்அம்மை, அவ்வையார் முதலியோரை கூறலாம், அத்தைகைய ஒரு பெண்மணியே ஆண்டாள், ஆனால் இப்பாடலின் சாராம்சம் புரியாமல் அதனை சர்ச்சைக்குரியாதாக்குவது விந்தையானது.


"வாரணமாயிரம் சூழவலம் செய்து

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்"


இப்பாடல் திருமணமாகாத பெண்கள் மார்கழியில் நோன்பிருந்து ஆண்டாளின் திருப்பாவையில் "வாரணமாயிரம்' என்று தொடங்கும் பத்து பாசுரங்களை பக்தியுடன் படித்தால் நல்ல கணவனும் நற்குணம் கொண்ட குழந்தைகளும் பெறும் பாக்கியம் கிடைக்கும்' என்று நம்பிக்கையுடன் பாடி வருகின்றனர்.




ஆண்டாள்-06

 ஆண்டாள்-06


மார்கழி மாதம் சைவர்கள் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்பாவை படிப்பதும் நம் மண்ணில் தொன்றுதொட்டு நடந்துவரும் ஒரு தொன்மையான நிகழ்வு. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் முப்பது பாக்கள் இருக்கின்றன. இறைவனோடு உயிர்கலந்து தான் மணந்து கொள்வதையே ஆண்டாள் கற்பனையாய் உணர்ச்சிமிகுதியாய் பாடிப்பார். கடவுள் நெறியில் ஈடுபடுவோர்க்கு காதல் நெறியில் உயிர்கள் செல்ல இயலாது என்பது சிலர் கூற்று, ஆனால் இதை பொய்ப்பிக்கிறது ஆழ்வார்களின் கூற்று, ஆண்டாளுடைய பெருமை அளவுகடந்தது, இறைவனுக்கு பணிபூண்ட ஆழ்வார்கள் பன்னிருவரில் பெண்பாலினத்தை சேர்ந்தவர் ஆண்டாள் ஒருவரே. அதுமட்டுமின்றி இறைவனின் தேவியருள் ஒருவராய் வைத்து போற்த்தக்கவர்.ஆழ்வாராய் இருந்து பாமாலை சூட்டியும், தேவியாய் இருந்து பூமாலை சூட்டிய அனுபவமும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவள் ஆண்டாள் மட்டுமே! ஆகவே பூர்வாச்சாரியார்கள் இருடிகளும், ஆழ்வார்களும் எத்தனை வாசியோ, அத்தனை வாசி ஆழ்வார்களும் ஆண்டாளுக்கே என்று போற்றினர்.


"பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், ஆண்டாள் பிறந்த 

திருவாடிப்பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்கு 

உண்டோ மனமே உணர்ந்துபார், ஆண்டாளுக்கு

உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு."


மணவாளமாமுனிகள் இயற்றிய உபதேசரத்தினமாலை இதனை உணர்ந்து உணர்த்துகிறது.


 தென்பாண்டி நாட்டு பதினெண் திருப்பதிகளில் எட்டாவதாய் அமைந்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வார், எம்பெருமான் திருமாலுக்கு தினமும் பூஜிக்க நந்தவனம் ஒன்றை ஏற்ப்படுத்தியிருந்தார், ஒருநாள் அந்நந்தவனத்தில் அழகிய பச்சிளம் பெண்மகவு ஒன்றை கண்டார். கி.பி 715 ல் ஆண்டாள் தோன்றியதாய் மு.ராகவையங்கார் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது ஆதாரங்கள் நிறைந்த கூற்று பெரும்பாலோர் ஏற்றுக்கொண்ட கருத்து. ஆனால் குருபரம்பரையில் இவர்தோன்றிய மாதமும், நட்சத்திரமும் அன்றி வேறு குறிப்புகள் இல்லை. இவரது இயற்பெயர் "சுரும்பார் குழற்கோதை" என்பதாகும். தான் சூடிக்களைந்த மலரை இறைவனுக்கு சூடியதால் "சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்" எனும் பெயரும் "சூடிக்கொடுத்த நாச்சியார் ","சூடிக்கொடுத்த பொற்கிளி" எனும் பெயரும் இவருக்கு உண்டு. ஆண்டாள் எனும் பெயர் இவருக்கு எதன்பொருட்டு வந்தது என்ற காரணம் அறியவில்லை. இறைவனின் தேவியாய் விளங்கியதால் "ஆண்டாள்" எனும் பெயர் ஒருங்கால் ஏற்ப்பட்டிருக்கக்கூடும்.


தன்மகளின் குழந்தைப்பருவத்தின் அழகை பெரியாழ்வாரின் திருமொழியில் அழகுபட வர்ணிக்கிறார் பெரியாழ்வார்.


"ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் 

      பேச்சும் அலந்தலையாய்ச் 

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் 

      உடுக்கவும் வல்லள் அல்லள் 

கையினில் சிறுதூதை யோடு இவள் 

      முற்றில் பிரிந்தும் இலள் 

பை அரவணைப் பள்ளியானொடு 

      கைவைத்து இவள்வருமே"


கோதை சின்னஞ்சிறுமியாய் சிற்றாடை கட்டி, மழலை மாறாமல் கேளிக்கைவிளையாட்டுகளில் ஈடுபட்டதையும், பதுமை வைத்து, மண்சோறுசமைத்து அதனை அனைவருக்கும் பகிர்ந்தளித்தமை, சிற்றில்லம் கட்டி விளையாடுகையில் அரங்கனுக்கும் தனிஅறை அமைத்து விளையாடியது,அந்த அறையில் அரங்கன் அமர்ந்தது, அவருடைய வில், சங்கு, போன்ற ஆயுதங்களை ஆண்டாள் வரைந்தது போன்றவற்றை வியந்து பெரியாழ்வார் போற்றுகிறார்.

இதனை


பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும் 

      முற்றத்து இழைக்கலுறில் 

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் 

      அல்லது இழைக்கலுறாள் 

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில 

      கோவிந்தனோடு இவளைச் 

சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும் 

      தட்டுளுப்பு ஆகின்றதே    


என்கிறார்.


பெதுமை பருவத்தில் ஆண்டாள்:


குழந்தையாய் இருந்த பேதைப்பருவம் ஒருநாள் பெதுமை பருவம் எய்தி குமரியாகிறார்(இனிமேல் இவரை அவர் என அழைப்போம்) ஆண்டாள், தந்தையுடனே வனத்தில் தங்கி, செடிகளுக்கு நீரூற்றி,  பூக்களை பறிக்கும் வேலையில் தந்தைக்கு தேவையான உதவிகளை செய்கிறார்,நாட்கள் செல்ல செல்ல மெல்ல கண்ணனின் உருவம் தன்மனக்கேதத்தில் உருவாவதை மெல்ல ஆண்டாள் உணர ஆரம்பிக்கிறார். கண்ணன் தனக்கானவன் என்று உரிமையுடன் உணர்கிறார்.எனவேதான் தன்தந்தை தினமும் நாதனுக்கு சூட்டும் மாலையை, தான் சூடி அதன்பின் தன் நாயகனுக்கு கொடுத்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றி, அதனை ஒருநாள் நிறைவேற்றவும் செய்தார், பின் அதுவே வழமை ஆயிற்று! இச்செயல்களை பெரியாழ்வார் அறிந்திருக்கவில்லை, கோவிலில் அர்ச்சகர் இவ்விடயத்தை அறிவார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை புதிய தெய்வீக மணமாகவும், வாடாமலும் இருப்பதைகண்டு இது பெரியாழ்வாரின் அற்புதம் போலும் என இடர்தெரிவிக்காமல் இருந்தார். இதற்கு முடிவும் ஒருநாள் வந்தது. தன்தந்தை வந்ததை மறந்து மாலைசூடி தன் நாதனையே நினைத்து மெய்மறந்தார். இந்நிகழ்வை கண்டு கடுஞ்சினங்கொண்டார் பெரியாழ்வார். இறைவனின் பெருமைகளை எடுத்து கூறி, இனியும் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என சினம்தனிந்தபின் கூறினார். கோதைக்கும் அதுவே சரியெனபட்டது. ஆழ்வார் தம் மகள் சூடிய மாலையை நாதனுக்கு சூட்ட விரும்பாது, புதியமாலையை கோர்த்து சூட்டினார். ஆனால் மாலையில் ஏதோ குறை இருப்பதை உணர்ந்தார். இதே எண்ணத்தோடு நீண்டநேரம் தம்மகள் செய்த காரியத்தை நினைத்தவாறே வருத்தம் கொண்டார். சிறிது நேரம் தன்னை மறந்து கண்ணயர்ந்தார். அச்சமம் திருமால் கனவில் தோன்றி, "என்ன ஆழ்வாரே இன்று மணமேயில்லாத இல்லாத மாலையை சூட்டி விட்டீரே, என வினவ பதில் அளிக்க தெரியாமல் திகைக்கிறார் ஆழ்வார், "இனி ஆண்டாள் சூடிய மாலையே வேண்டும் "என கூறி மறைகிறார்.அவ்வாறே மறுநாள் செய்தார், தம்மகள் திருமாலின் தேவிதான் என்ற எண்ணம் தோன்றியது ஆழ்வாருக்கு.தம் மகளின் தெய்வீகத்தன்மையை எண்ணி உவகை கொண்டு, ஆனந்த கூத்தாடினார்.ஊரெல்லாம் இச்செய்தி பரவி, கோதையாள் "சூடிக்கொடுத்த சுடர்கொடி" ஆனார். அன்றுமுதல் பெரியாழ்வார் "தொடைசூடி கொடுத்தாளைத் தொழுமப்பன்" எனப்பட்டார். நாள்தோரும் தம்கனவில் தம் மனக்கேதத்தை ஒருநாள் ஆண்டாள் தகப்பனிடம் கூறினார்.


ஆண்டாளின் ஆசையை கேட்டு பெரியாழ்வாரின் நிலையையும், அவர் பாடிய பாசுரங்களையும், ஆண்டாள் திருப்பாவையையும் நாளை காண்போம்.   







பெரியாழ்வார் 05

 பெரியாழ்வார்-05


ஸ்ரீவில்லிப்புத்தூர் வரலாறு:


"பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று

ஈண்டிய சங்கம் எடுத்தூத வேண்டிய

வேதங்களோதி விரைந்து கிழி யறுத்தான்

பாதங்கள் யாமுடைய பற்று"


எழில்மிக்க முத்துக்களின் பிறப்பிடமாய் விளங்கியது பாண்டியநாடு, அந்நாட்டில் ஆங்காங்கே பொய்கைகளும், ஊருணிகளும் நிறைந்து வளமை செய்தது. இப்பழம்பதியில் புத்தூர் என்ற ஊர் ஒன்று உண்டு, கடும்வனமான அப்பகுதியில் பல வேடர்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வேடர்குல தலைவனுக்கு, தலைவியாயே மல்லி என்பவள் வாழ்ந்துவந்தாள்.வில்லி என்றும் கண்டன் எனும் மாந்தர்களை ஈன்று சீறும் சிறப்பாய் வாழ்ந்து வந்தாள் மல்லி. அவ்விரு குழந்தைகளும், காளையர் பருவம் எய்தியவுடன், தம் தந்தையர் விருப்பத்திற்கேற்றவாரு வேடர் குல தலைவர்கள் ஆயினர். சகோதரர்கள் இருவரும் தம்குல வமைப்படி வேட்டைக்கு சென்று பல விலங்கினங்களை கொன்று குவித்தனர். அதில் லாவகமாய் ஒருபுலி தப்பித்து ஓட, அதனைபின் சென்று துரத்தியவாறே கண்டன் ஓடினான், மறைந்து நின்ற புலி கண்டனை அடித்து கொன்றது. தம் சகோதரனை நீண்டநேரம் காணாததால், வில்லி காட்டிற்குள் சென்றுதேட அங்கு இறந்துகிடந்தான் கண்டன். அந்த கோரகாட்சியை கண்டு அழுது மூர்ச்சயடைந்தான் வில்லி, அப்போது கனவில் தோன்றி காட்சியளித்து அருளினார் திருமால், அருகேயுள்ள புத்தூரில் தமக்கு மிகப்பெரிய கோவிலெழுப்பி அங்கு தம்மை குடியேற்ற ஆணையிட்டார். மேலும் அருகேயுள்ள குகையில் உம்சகோதரனை கொன்ற புலியின் குகை உள்ளது. அங்கே நிறைய செல்வங்கள் உள்ளது. உம் சகோதரனும் உயிர்த்தெழுவான் என அருளினார். இறைவன் கூறிய அனைத்தும் நடந்தது. வில்லியும் திருமால் கனவில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றினான், மிகப்பெரிய கோவிலெழுப்பி புத்தூர் என்ற பெயருடன் தம் பெயரையும் இனைத்து "ஸ்ரீவில்லிப்புத்தூர்" என புதுநாமம்  சூட்டினான்.


பெரியாழ்வார் தோற்றம்:


ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மறையவர் குலத்தில் வேயர்கள் எனும் ஒருபிரிவு இருந்தது. அதில் முகுந்தபட்டர் எனும் முன்குடுமி பிராமணர் இருந்தார்,பதுமவல்லி எனும் பெண்ணை மணந்து, அவர்கள் வாழ்ந்த நல்வாழ்க்கைக்கு அருந்தவப்புதல்வன் ஒருவன் பிறந்தான். இன்றுவரை நாம் அவரை பேசுபொருளாய் கொண்டுள்ள ஞானகுழந்தை அது. அவருக்கு பெற்றோர் இட்டபெயர் "விஷ்ணுச்சித்தர்"

ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் இவர்.  இவர் திருமாலின் கருடவாகன அம்சமாய் கருதுவர். திருமாலுக்கு செய்யும் தொண்டுகளில் ஏது சிறந்ததென சிந்தித்து "பூவையே பூவண்ணணுக்கு பூமாலை கட்டி சமர்ப்பிப்பதே சிறந்த கைங்கரியம்" என முடிவெடுத்து மிகப்பெரிய அளவில் நந்தவனம் அமைத்து, அதில் விளைந்த பூக்களை மாலையாய் கோர்த்து தினமும் திருமாலுக்கு சாற்றி வருவதையே வழமையாய் கொண்டு வாழ்ந்து வந்தார்.


மன்னர் வருகை:


பெரியாழ்வாரின் காலத்தில் மதுரையை ஸ்ரீவல்லபன் எனும் பாண்டிய மன்னன் ஆட்சி செய்தான். நகர்வலம் இரவில் வருகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வீதியின் திண்ணையில் ஒரு அந்தணன் உறங்கியிருக்க, அவரையெழுப்பி மன்னன் விசாரித்தார். தான் திவ்யதேச யாத்திரை செல்வதாய் அவன் பதிலுரை அளித்தான். தனக்கு ஒரு நீதி ஒன்றை சொல்லுமாறு வேண்ட,


"மழைக்காலத்தில் வேண்டியதை மற்றை எட்டு மாதங்களிலும்,இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இரவிலும், மறுமைக்கூ வேண்டியதை இம்மையிலும்" தேடுக எனும் பொருள்பொதிந்த ஸ்லோகம் சொல்லி முடித்தான்.மன்னனுக்கு இச்சொல் பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது. அரண்மனைக்கு சென்ற மன்னனுக்கு இரவெல்லாம் உறக்கம் வரவில்லை, மறுநாள் புரோகிதரான செல்வநம்பியை அழைத்து, மறுமையில் இன்பம் பெற வழி என்ன? என கேட்க, அவருக்கும் விடைதெரியாமல், நாடெங்கிலும் உள்ள சமயபெரியோர்களை அழைத்து விவாதம் நடத்த யோசனை கூற, அக்கூட்டத்தில் விஷ்ணுசித்தனும் கலந்து கொண்டு "மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்நெறி" என்று நிறுவ, மண்டபத்திலுள்ள பொற்கிழி தானே கீழேவிழ, அதை ஏந்திக்கொண்டார் விஷ்ணுசாத்தர். அவ்விக்கம் மன்னனுக்கு திருப்தியளிக்க, "பட்டர்பிரான்" என்று பட்டமளித்து அவையில் அவரை பெருமைபடுத்தினார்.மேலும் அவரை யானைமேல் அமர்த்தி நகர்வலம் வரச்செய்தார், அச்சமயம் கருடன்மேல் அமர்ந்து திருமால் வாணில் காட்சியளித்தார். இறைவனையே நேரில் கண்டதால் விஷ்ணுசித்தர், பெரியாழ்வார் ஆனார்.


பெரியாழ்வார் காலம்:


இவ்வாழ்வார் காலத்தில் புறச்சமயமமான சமண, பௌத்தம் ஆகியவற்றை பற்றி இவ்வாழ்வார் பாடவில்லை, இவர்நடத்திய சமயவாதம் சைவமதத்தினுடேதான். ஸ்ரீவல்லபதேவன் எனும் பாண்டிய மன்னரை குருபரம்பரை கூறுகிறது. ஆனால் பெரியாழ்வார் தம் பாசுரத்தில்

"கோ நெடுமாறன்" என்ற பாண்டியரை பாடுகிறார். சம்பந்தரின் சமகாலமான "நின்றசீர் நெடுமாறன்" சைவமதத்தை சேர்ந்தவர்.ஆனால் இவரது மகனான பராந்நக நெடுஞ்சடையன் பரம வைஷ்ணவர் எனவே இவரது காலமே பெரியாழ்வர் காலம், அதாவது எட்டாம் நூற்றாண்டு என்பது மு.இராகவைய்யங்காரின் கருத்து, இக்கருத்தை பொதுவாய் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.


பெரியாழ்வார் பாசுரங்கள்:


பெரியாழ்வார் அருளிச்செய்த இரு பிரபந்தங்களுள் முதலாவது "திருப்பலாண்டு" என்பதே. இதில் பன்னிரண்டு பாசுரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் "பல்லாண்டு பல்லாண்டு" என்று ஆரம்பிக்கும். பல்லாண்டு பாடுதலை மங்களாசாசனம் என்கிறது வைணவமரபு.


கண்ணனை குழந்தையாய் பாவித்து, பிள்ளைத்தமிழ் பாணியில் பெரியாழ்வார் நிறைய பாசுரம் பாடியுள்ளார். இன்றும் நம் வீடுகளில் அழும் குழந்தையை சமாதானப்படுத்த, காக்கையை விளையாட்டிற்கு அழைப்பர், 


"காக்கையே கண்ணுக்கு மை கொண்டுவா"

"காக்கையே முடிவார சீப்பு கொண்டுவா" என பெரியோர்கள் விளையாட்டாய் பாடுவர், இதனையே 1200 வருடம் முன்பு பெரியாழ்வாரும் பாடியுள்ளார்,


"திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த 

வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும் 

அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம் 

கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய். 

கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய்"


"வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றி 

தாலிக்கொழுந்தைத் தடங்கழுத்திற்பூண்டு 

பீலித்தழையைப் பிணைத்துப்பிறகிட்டு 

காலிப்பின்போவாற்குஓர்கோல்கொண்டுவா 

கடல்நிறவண்ணற்குஓர்கோல்கொண்டுவா"


"கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் 

எங்கும்திரிந்து விளையாடும்என்மகன் 

சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல் 

அங்கமுடையதோர்கோல்கொண்டுவா 

அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா"


"கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான் 

பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான் 

நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி 

சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா 

தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா


இன்றைய நம் வீடுகளில் குழந்தைக்கு சோறூட்ட அழைக்கும் காக்கையை கண்ணனுக்காய் அன்றே அழைத்துள்ளார் பெரியாழ்வார்.


அன்றைக்கு புழக்கத்தில் இருந்த உணவுபழக்கத்தையும் தன் பாடலில் காட்சிப்படுத்துகிறார்,

"கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி 

பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய் 

இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார் 

அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே"


கும்மாயம் என்பது  அவித்தபயிருடன் நாட்டுச்சக்கரை கலந்து உண்ணும் உணவினை, பெரும்பாணாற்றுப்படை "கும்மாயம்" என்கிறது. மணிமேகலை இதனை "பயிற்றுத்தன்மை கெடாது கும்மாயமியற்றி" என்கிறது. இந்த கும்மாயஉணவு நிறைய கல்வெட்டுகளில் பயின்று வருகிறது!


சொத்தை சேர்த்துவைத்து, கடைசிகாலத்தில் அது மறந்துபோய், சுற்றத்தார் வினவ, பதிலும் சொல்ல இயலாது நிலைவருமுன், நெஞ்சினிலே நாதனுக்கு கோவிலெழுப்பி அதில் பூவிடுங்கள் என்கிறார் இவ்வாழ்வார்

"சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில் 

சொல்லுசொல்லென்றுசுற்றுமிருந்து 

ஆர்வினவிலும்வாய்திறவாதே 

அந்தகாலம்அடைவதன்முன்னம் 

மார்வமென்பதோர்கோயிலமைத்து 

மாதவனென்னும்தெய்வத்தைநட்டி 

ஆர்வமென்பதோர்பூவிடவல்லார்க்கு 

அரவதண்டத்தில்உய்யலுமா"






திருமழிசை ஆழ்வார்-04

 திருமழிசை ஆழ்வார்-04


தொண்டை நாட்டு திருத்தலமான "திருமழிசை" எனும் ஊரில் தோன்றியவர் இவர். திருமாலினை நாள்தோறும் தவராமல் துதித்து வந்த பார்க்கவமுனிவருக்கும் அவரது மனைவிக்கும் மகனாய் பிறந்தவர் இவர், அதன்பின் தன் தந்தையாலேயே கைவிடப்பட்டு திருவாளர் என்பவரால் குழந்தைபருவத்தில் கண்டறியப்பட்டு வளர்க்கப்பட்டவர் இவர். இந்த திருவாளரது மகன் கணிகண்ணர் என்பவராவார். திருமழிசையாழ்வாரின் தொண்டராகவே அவருடன் பயணித்தார் கணிகண்ணர்.

216 பாசுரங்களை பாடியவர். அவை நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்) என்று அழைக்கப் படுகின்றன. இவரை குறித்து சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது,


 முதலாழ்வார்கள் பாடிய தலங்களை தரிசித்துவிட்டு, திருக்குடந்தைக்கு செல்ல திட்டமிட்டிருக்கையில், திருவெஃவில் சில நாட்கள் தங்கியிருந்தார் அச்சமயம் இவருக்கு தொண்டாற்றிய கிழவி ஒருத்தியை குமரியாக்கினிர், ஊரே இந்த விஷயத்தை பரபரப்பாய் பேசியது. இவ்விடயம் கேள்விப்பட்ட அந்நகரத்து மன்னன், தனது வயோதிகத்தையும் போக்க, ஆழ்வாரை அழைத்துவர திருமழிசையான் தொண்டரான கணிகண்ணருக்கு ஆணையிட்டான், ஆனால் இதற்கு திருமழிசையார் இசையவில்லை, உடனே கடுஞ்சினம் கொண்ட மன்னன், இருவரையும் இந்நகரை விட்டு வெளியேற ஆணையிட்டான். ஆழ்வாரோ இந்நகரில் உள்ள பெருமாளையும், கணிகண்ணரையும் தன்னோடு அழைத்து நகரை விட்டு கிளம்பினார். பெருமாளே போனபின், அந்நகரில் வாசம் கொண்டிருந்த இன்னபிற தேவதைகளும், திருமகளும் கிளம்ப, நகரே வெறிச்சோடியது, தன்தவறை உணர்ந்து ஆழ்வாரிடம் சரணாகதி அடைய திருமழிசையாரும் மீண்டும் வந்து திருமாலை அந்நகரில் குடிபெயர்த்தினார்.அதன்பின் குடந்தையிலேயே நிரந்தரமாய் தங்கி, பதிகங்களை பாடி அங்கேயே பரமபதம் அடைந்தார்.


திருமழிசையாரின் காலநிலை:


திருமழிசையார் கதையில் வரும் அந்த மன்னரின் பெயர்  குறித்து குறிப்பில்லை. கி.மு விலிருந்தே காஞ்சி நகருக்கு குறிப்பில்லை, சங்ககாலத்தில் பல்லவரை பற்றி குறிப்பில்லை எனினும், லோகவிபாகம் எனும் திகம்பர சமணநூலில் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த சிம்மவிஷ்ணு குறித்த குறிப்புள்ளது. சிலர் முதலாழ்வார்களின் சமகாலத்தில் தோன்றியவரே திருமழிசையாழ்வார் எனும் கருத்தினை வைப்பர். முதலாழ்வார்கள் மூவரையும் திருவல்லிக்கேணியில் சந்தித்ததாய் கதை ஒன்று உண்டு.ஆனால் இவரது பாசுரம் ஒன்றில்,


"அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்

சிறியார் சிவப்பட்டார் செப்பில்  வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்

ஈனவரே யாதலால் இன்று"


இவர் வாழ்ந்த காலத்தில்தான் சைவ, வைணவ விரிசல் அதிகமாக இருந்திருக்கிறது. பெளத்தமும், சமணமும் கூட சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்திருக்கின்றன. இவையெல்லாம்

முதலாழ்வார்கள் காலத்தில் சிறிதும் காணமுடியாது. மேலும்,


"நாராயணன் என்னை யாளி நரகத்துச்

சேராமல் காக்கும் திருமால்தன் பேரான

பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு

ஆசைப்பட்டாழ்வார் பலர்"


என்றும் பாடுகிறார்.


காப்பு மறந்தறியேன்  கண்ணனே என்று இருப்பன்

ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்*  ஆக்கை

கொடுத்து அளித்த கோனே குணப்பரனேஉன்னை 

விடத்துணியார்மெய்தெளிந்தார் தாம்.


என்ற இந்தபாடலில் பயின்றுவரும் "கோன் குணபரனே" யார் என ஆய்ந்தால் அது முதலாம் மகேந்திரவர்மனை குறிக்கும் சொல்லாகும், இவரின் பல சிறப்புபெயர்களில் குணபரன் என்பதும் ஒன்று. எனவே திருமழிசையாரின் காலம் 7 ம் நூற்றாண்டின் முற்பகுதி என கூறலாம்.


திருமழிசையாரின் பதிகங்கள்:


வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி 

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் 


என்ற பாடலின்மூலம்,

வீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி, தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம். வீடுபேறு கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும் விண்ணவர்க்கு நற்பொருளும் நாராயணன் தான்  என வழிகாட்டுகின்றார். 


கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்

உண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர்


கூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற ஊர் திருவரங்கம் என்கிறார், மேலும் இலங்கைவேந்தன் இராவணனையும் ஸ்ரீரங்கத்துடன் தொடர்புபடுத்தி கீழ்க்கண்ட பாடலில் பாடினார்.


"சரங்களைத்து ரந்துவில்வ ளைத்துஇலங்கை மன்னவன்,

சிரங்கள்பத்த றுத்துதிர்த்த செல்வர்மன்னு பொன்னிடம்,

பரந்துபொன்நி ரந்துநுந்தி வந்தலைக்கும் வார்புனல்,

அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே"


திருக்குறள் காலகாலமாய் நம் மண்ணில் நிலை கொண்டது என்பதற்கு திருமழிசையாரின் பதிகமும் ஓர் சான்று, திருவள்ளுவரின் அறத்துப்பாலில் வரும் விருந்தோம்பல் அதிகாரத்திலுள்ள குறளான, 


"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்"


என்ற குறளை திருமழிசையார் நேரடியாய் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



பேயாழ்வார்:03

 பேயாழ்வார்:03


 திருமாலிடம் ஆழ்ந்த அன்புகொண்டு இவர் செய்த செயல்கள் சராசரி மனிதரினும் வேறுபட்டவராக இவரைக் காட்டின. தம்மை மறந்த நிலையில், பித்துபிடித்து பேய்போலே உலாவினார் பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து சிரிப்பார், குதித்து ஆடிப்பாடுவார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று அனைவரும் அழைத்தனர். தொண்டைநாட்டில் உள்ள இன்றைய சென்னை நகரின் முக்கிய பகுதியான திருவல்லிக்கேணிக்குத் தென்திசையிலுள்ள மயிலாப்பூர் என இன்று அழைக்கப்படும் திருமயிலையில் ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் இவர் தோன்றிய நாளாகும் இவர் திருமால் ஏந்திய வாள் படையின் அம்சமாய் கருதுவர். பேயாரின் மனம் இளம்பிராயத்திலேயே கற்கவேண்டிய கல்விச்செல்வம் அனைத்தும் வெகுவிரைவில் கற்றுதேர்ந்தார். இருப்பினும் அவர்மனம் அதனையும் தாண்டி திருமாலின் திருவடியையே நாடியது.தனிமையில் எம்பெருமான் திருமாலின் நாமத்தையே கண்ணீர்மல்க உருகி பாடிக்கொண்டே இருப்பார். இக்காட்சியை காண்போருக்கு இச்செயல், செந்தாமரை மலரின் தேனை அதீதமாய் குடித்து அம்மலரிலேயே மயங்கிகிடக்கும் வண்டினை போலவே காட்சியளித்தது. அளவுக்கு மீறினால் அமுதும் நஞ்சுதானே! வெளியுலகத்தை மறந்து திருமாலை போற்றினாலும், சுற்றத்தார் கண்களுக்கு இவரது தோற்றம் அச்சம் தருவதாகவும், பரிதாபமாகவும் தோன்றியது.


திருக்கோவலூரில் முதலாழ்வார்கள் மூவரையும் இணைத்து திருவிளையாடல் நிகழ்த்திய எம்பெருமானை எண்ணி முதலிருவரும், மனமுருகி அந்தாதி பாடல் பாடியது போலவே இவரும் 100 வெண்பாக்கள் பாடினார் இது மூன்றாம் திருவந்தாதி எனப்படும். இத்திருநூல் "திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்"எனத் தொடங்கி, "சார்வு நமக்கு என்றும்" எனத் தொடங்கும் வெண்பாவில் முடிகின்றது. இது திருக்கோவலூரில் அருளிச் செய்யப்பட்டது.


பேயாழ்வரின் பதிகங்கள்:


இவர் சிறந்த கற்பனை வளம்மும், கவிபாடும் திறனும் மிக்கவர், உதாரணமாய், 

திருமாலின் உந்தியில் உள்ள தாமரை அவர் கையில் ஏந்தியுள்ள சக்கரத்தினை கண்டு கதிரவன் என்று கருதி மலர்கிறதாம். அவர் மற்றொரு கையில் ஏந்திய வெண் சங்கினைச் சந்திரன் எனக் கருதிக் குவிகிறதாம் என்று பாடியதைக் கூறலாம்.


"ஆங்கு மலரும் குவியுமாம் உந்திவாய்

ஓங்கு கமலத்தின் ஒண்போது - ஆங்கைத்

திகிரிசுடர் என்றும்; வெண் சங்கம் வானில்

பகரும் மதி என்றும் பார்த்து"


பொய்கையாழ்வார் கூற்றுப்படி இவரும், "அரியும் ஹரனும் ஒருவரே" என்கிறார்.


"தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்

திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து"


தான் சென்ற வைணவத்தலங்களை கீழ்க்கண்ட பாடலில் பாடுகிறார். பொய்கையாழ்வாரை போலவே இவரும் "விண்ணகரம்" எனும் ஊரினை பாடுகிறார். இது கும்பகோணம் பகுதி விண்ணகரமான, உப்பிலியப்பன் கோவில் என்று கூறுவர், சிலர் இது காஞ்சியை சேர்ந்த''பரமேஸ்வர விண்ணகரம்" என்பர்.


"விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம்,

மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,

தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு"


திருமால் கருப்போ, பச்சையோ, சிவப்போ, வெண்மையோ? திருமகளை தவிர எவரும் அறியோர்! என திருமாலின் வண்ணத்தினை விவரிக்க இயலாது திகைக்கிறார் இந்த பேயாழ்வார்.



"நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,

இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய

நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,

பூமங்கை கேள்வன் பொலிவு"



பூதத்தாழ்வார்-02

 பூதத்தாழ்வார்-02


ஐப்பசி அவிட்டத்தில் இவர் அவதரித்ததாய் குருபரம்பரை கூறுகிறது. திருக்கடல்மல்லை ஸ்தலசயனப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில், அழகிய குருக்கத்தி மலரில் பூதத்தாழ்வார் அவதரித்தாய் ஐதீகம்.இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை ஆகும், இவர் தனது பாசுரங்களில் தன்னை "பெருந்தமிழன்" என பெருமை பொங்க அழைத்துள்ளார். இவர் திருமாலின் ஆயுதமான "கௌமோதஹி" எனும் கதாயுத அம்சமாய் தோன்றியவர். இவர் பதிமூன்று திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இவ்வுலகின் பந்தங்களை அறுத்து, திருமாலின் திருவடிப்பேற்றை எண்ணியே தம் வாழ்நாளை கழித்தவர். தம் மனதிற்குள்ளாகவே தம் நாதனுக்கு ஓர் கோவில் உருவாக்கி, அதற்குள்ளாகவே ஞானநீரால் நீராட்டி, திருமாலது திருவடிகளில் தம் அன்பினையே மலராக அர்சித்து வருவதனையே வாடிக்கையாய் கொண்டார்.

பூதம் என்னும் வடசொல்லானது "பூ" என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருளாவது, சத்தைப் பெற்றது என்பது. சத்து என்றால் அறிவு என்று பொருள்.திருமாலின் திருக்குணங்களை அனுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார் என்பர். இக்காரணங்களால் இவர் "பூதத்தாழ்வார்" என அழைக்கப்பெற்றார்.


பூதத்தாழ்வாரின் பாசுரங்கள் இரண்டாம் திருவந்தாதி எனப்படும்!  இது இயற்பா என்னும் பிரிவில் வரும்.தனிப்பாடல் நீங்கலாக இதில் 100 வெண்பாக்கள் அடங்கியுள்ளது. இப்பாடல் தோறும் திருமாலின் நற்குணங்கள் பற்றிய புகழ்ச்சியும், அவருடைய அருட்செயல்களும் நிரம்பி வழியும்.


பூதத்தாழ்வாரின் பாடல்கள் இயல்பு:


திருக்கோவலூரில் எம்பெருமானின் ஆசியால் முதலாழ்வார்கள் மூவரும் அங்குசூழ்ந்த மையிருட்டில் தமது கைங்கர்யங்களின் மூலம் திருமாலை உளமார கண்டர், அக்கதை குறித்த குறிப்பு கீழுள்ள சுட்டியில் காண்க

https://aalvaarkalvaralaru.blogspot.com/2021/05/blog-post_11.html

இதில் பூதத்தாழ்வாரின் பக்தி எவ்வாறெனில், அவர் தம்அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை விளக்குத் திரியாக்கி ஒளிவிடுகின்ற ஞானச்சுடரை, ஞானத்தமிழ் கொண்டு ஏற்றுகின்றேன் என்பவர்.

ஐம்புலன்கள் ஆகி நின்றவனும், ஐம்பெரும் பூதங்களாகி உலகத்து உயிர்களை வாழ வைப்பவனும் உலகளந்த பிரான் எனத் தம்முள் பெருமாளைக் காணும் ஆழ்வார் இவர்.


மலர்கள் நிறைந்த கொடி கொம்பை நாடிப் படர்வது போல, தம் மனம் நிலவைக் கடந்து வானத்தின் உச்சியை நோக்கி, அருள் செல்வம் வழங்கும் பெருமானைத் தேடி ஓடுகின்றது என ஓர் பாடலின் உவமை வழி தம் சிந்தையை விளக்குகின்றார்.


தளிர்கள் நிறைந்த கொடி படர்வதற்குக் கொம்பைத் தேடுவது இயல்பு. அதுபோல இறைப்பற்று மிகுந்திருக்கும் தம் உயிர் அருள் நிறைந்திருக்கும் இறைவனை நாடிச் செல்வது இயல்பு என்கிறார் பூதத்தாழ்வார்.


பூதத்தாழ்வார் பாசுரங்கள்:


தம் அன்பை விளக்காக்கி, ஆர்வத்தை நெய்யாக்கி, சிந்தனையை திரியாக்கியதை நாலாயிர திவ்யபிரபந்தத்தின்  கீழ்க்கண்ட பாடலில் விளக்குகிறார்,


ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,

தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், வானத்

தணியமர ராக்குவிக்கு மதன்றே, நாங்கள்

பணியமரர் கோமான் பரிசு


மற்றுமொரு பாடலில் இப்பூலகில் எமக்கு எந்த அரசப்பதவி கிடைத்தாலும், தேவலோகத்து பதவியே கிடைத்தாலும், எம்பெருமானின் திருமாலை வணங்கும் பேரு ஒன்றே போதும் என தம் மனவோட்டத்தை விளக்குகிறார்.


மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,

விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, நண்ணித்

திருமாலை செங்க ணெடியானை, எங்கள்

பெருமானைக் கைதொழுத பின்.


“யாமே சிறந்த தமிழன்,தமிழனாக இருப்பதனால் நான் நல்லவன் ஆனேன், முயன்ற தவத்தை என்றும் கைக்கொண்டுள்ளேன். தமிழிலே நல்ல பாமாலை உன் திருவடிகளிலே சூடத்தக்க தாகக் கூறினேன்” மேலும்


   “யானே பெருந்தமிழன் நல்லேன்” என்று தமிழை சிறப்பித்து கூறி, தம்மை பெருந்தமிழன் என பெருமைபொங்க சிறப்பாய் பாடுகிறார் பூதத்தாழ்வார்.


"யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,

யானே தவமுடையேன் எம்பெருமான்,  யானே

இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,

பெருந்தமிழன் நல்லேன் பெரிது"


வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை, பிராமணண் ஒழுக்கத்தை மறக்கக்கூடாது என திருவள்ளுவரே தம் குறளில் கூறுகிறார், ஆனால் பூதத்தாழ்வாரோ ஒருபடி மேலேபோய், வேதமே ஒரு விஷயமில்லை, எம்பெருமான் மாதவன் பெயரினை உச்சரித்தாலே போதும் என்கிறார்.


ஒத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்

ஏத்தும் திறமறிமி னேழைகாள், ஒத்ததனை

வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்

சொல்லுவதே ஒத்தின் சுருக்கு


இவரின் பாடல்களையே தனித்தனி பதிவாய் இடலாம், அவ்வளவு சிறப்பு வாய்ந்தது .



பொய்கையாழ்வார்

 பொய்கையாழ்வார்:


முதலாழ்வார்களின் காலம்:


ஆழ்வார்கள் பன்னிருவரில் முதலாழ்வார்கள் என மூவர் போற்ப்படுவர். இவர்களில் முதலாமவர் "பொய்கையாழ்வார்", பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஏனைய இருவராவார்கள். இவர்கள் மூவரும் சமகாலத்தவர்கள் என நம்பப்படுகிறது. இம்மூவரே வைணவமதத்தின் ஆதிகவிகள். சைவமத சமயக்குரவர்களை போல எளிதில் இவர்களின் காலத்தினை கணிப்பது சற்று சிரமமானது. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சமண-வைதீக சமயங்களின் கருத்துமோதல்கள் திருமுறைகளின் வாயிலாய் தெரியவருவதாலும், முதலாழ்வார்களின் பாடல்களில் இத்தகைய பூசல்கள் எங்கேயும் காணப்படாததால்  இவர்களின் காலத்தினை உறுதியாய் 7ம் நூற்றாண்டின் முற்பகுதியாய் கூறலாம். இம்முதலாழ்வார்களை திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில்,


 "வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் 

      வேதம் உரைத்து இமையோர் வணங்கும் 

செந்தமிழ் பாடுவார்,தாம் வணங்கும் 

      தேவர் இவர்கொல்"

என்றும், "இன்கவி பாடும் பரமகவிகள்" எனவும் நம்மாழ்வாரால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர "உபதேச ரத்தினமாலை" எனும் ஒரு நூல் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணவாள மாமுனிகள் என்னும் சமயப்பெரியோரால் இயற்றப்பட்டது. இந்நூல் பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய அரிய பல செய்திகளைத் தருகின்றது. இதில் முதல் ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிடும்போது ஏனைய ஒன்பதின்மருக்கும் முதலாழ்வார்கள் காலத்தால் முற்பட்டோர் எனக் கூறியுள்ளது. இக்காரணங்களாலே இவர்கள் மூவரும் மற்ற ஆழ்வார்களுக்கு காலத்தால் மூத்தவர்கள் எனகூறுவர்.


முதலாழ்வார்கள் குறித்த புராண நம்பிக்கைகள்:


இம்மூவரும் ஐப்பசி மாதத்தில் அவதரித்தனர். மூவரும் தாயின் வயிற்றிலே தோன்றாத அவதாரபுருஷர்கள் என்பது ஐதீகம். இம்மூவரும் தம்மை ஒருவயொருவர் அறியாமல், திருமால் நினைப்போடு பக்தியோடு ஊர் ஊராய் சுற்றி அழைந்தனர். இவர்களை ஒன்றிணைக்க எண்ணிய திருமால், அவர்களை திருக்கோவலூரில் சந்திக்கும் நிலை ஏற்ப்படுத்தினார். ஒரு நாள் கதிரவன் மறைந்த மாலை வேளையில் பொய்கையாழ்வார் திருக்கோவலூர்க்குச் சென்றார். அங்கு இருந்த மிருகண்டு முனிவர் திருமாளிகைக்குச் சென்று வழிபட்டார். அம்மாளிகையின் இடைகழியில் படுத்தார்.


சிறிது நேரத்தில் பூதத்தாழ்வாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் வைணவ மரபுப்படி ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது பொய்கையார் மற்றவரிடம், “இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமர்ந்திருக்கலாம்”  என்றார். அவ்வாறே இருவரும் அமர்ந்த நிலையிலேயே பெருமானின் பெருமைகள் பற்றி உரையாடியிருந்தனர். அப்போது பேயாழ்வாரும் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர்கள் ஒருவரையொருவர் வணங்கி மகிழ்ந்தனர். அப்போது, முதலிருவரும் பேயாழ்வாரிடம், “இவ்விடம் இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்” என்றனர். அவ்வாறே மூவரும் நின்ற நிலையிலேயே பேசிக்கொண்டிருந்தனர்.


அச்சமயம் திருமால் தம் திருவிளையாடலை நிகழ்த்தினார். அவர் திரு ஆணைப்படி செறிவான இருள் சூழ்ந்தது,பெருமழை பொழிந்தது. பெருமான் ஒரு பெரிய உருவமெடுத்து அம்மூவரிடையே புகுந்து நெருக்குதலை உருவாக்கினார். சட்டென உருவான அந்த நெருக்கத்திற்குக் காரணம் அறியாமல் மூவரும் திகைத்தனர்.


பொய்கையாழ்வார் இருளை ஓட்டிட விளக்கேற்ற விரும்பினார். இம்மண்ணுலகத்தையே அகலாகக் கொண்டு, உலகை வளைத்துக் கிடக்கும் கடலையே நெய்யாக வார்த்து, கதிரவனையே சுடராகக் கொளுத்தினார். பூதத்தாழ்வாரும் விளக்கேற்றினார். அவர் அன்பையே தகழியாக்கினார்.தனது ஆர்வத்தையே நெய்யாக ஊற்றினார்,உருகும் தம் சிந்தையையே திரியாக அமைத்தார், ஞானத்திருவிளக்கை ஏற்றினார். இப்பெருமக்கள் ஏற்றிய விளக்குகளின் ஒளி இருளை ஓட்டியது. அதன் வெளிச்சத்தில் பேயாழ்வார் பெருமானின் திருவடிவினைக் கண்டார். அவர் கண்ட காட்சியை மற்றைய இருவரும் பின்னர்க் கண்டனர். அவர்கள் பெற்ற வியப்புக்கு உரிய அந்த இறைக்காட்சியைப் பொருளாக வைத்து மூன்று திருநூல்களை வெளியிட்டருளினர். 

சான்றோருடைய தொண்டைமண்டலம் என சிறப்பித்து கூறுவதற்கேற்ப, தொண்டை மண்டலத்தில் தோன்றிய இவர்களால், தென்னகம் எங்கும் மெல்ல பரவி தமிழகம் முழுவதும் வைணவம் வியாபித்தது.


பொய்கையாழ்வார் பிறப்பு:


காஞ்சிமாநகரில் உள்ள திருவெஃகா என்ற வைணவத் திருப்பதியின் வடபகுதியில் இருந்த ஒரு குளத்தின் ஒரு பொற்றாமரை மலரில் திருஅவதாரம் செய்தார் என்கிறது வைணவ மரபு. இவரைத் திருமால் ஏந்திய படைக்கலங்களுள் பாஞ்சசந்நியம் (திருமால் கைச்சங்கின் பெயர்) என்பதன் அம்சம்  என்று வைணவர் கருதி வருகின்றனர்.  பொய்கையில் தோன்றியவராதலால் இவர் வைணவர்களால்

 பொய்கையாழ்வார் எனப்பட்டார். இவர் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர்.


திருக்கோவலூரில் திருமாலின் திருவிளையாடலால் ஏற்பட்ட இருளில் இருந்து விடுதலை பெறுவதற்காக "வையம் தகளியா" எனத் தொடங்கி  100 வெண்பாக்களைக் கொண்ட அந்தாதி பாடலை இவர் பாடினார். அந்தம் என்பது இறுதியாகும், 

ஆதி என்பது தொடக்கமாகும்

அதாவது ஒரு பாடலின் இறுதியில் வரும் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமைந்து தொடர்ந்திடும் பாடல் அமைப்புடன் கூடிய சிற்றிலக்கிய வகை அந்தாதி எனப்படும். 

ஒரு சொல் என்று கூட இல்லை. கடைசி அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ கூட வரும் வண்ணம் அமைந்திருக்கலாம். இந்த இலக்கிய வகையை தொல்காப்பியர் ‘இயைபு’ என்று குறிப்பிடுகிறார். யாப்பருங்கலக் காரிகை இதை அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி என்று கூறுகிறது. சொற்றொடர் நிலை என்றும் சொல்வார்கள். பொய்கையாழ்வார் பாடிய பாடல்"முதல் திருவந்தாதி" என்று பெயர் பெற்றது. அந்தாதித்தொடையில் இயற்றப்பட்ட மிகப் பழைய பிரபந்தங்களுள் இதுவும் ஒன்றாகும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இவர் பாடிய நூறு பாடல்கள் உள்ளன. இவற்றில் சிறப்பான சில பாடல்களை காண்போம்.


1)"வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக,செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று"


(எல்லாம்வல்ல இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை பொய்கையார், இறைவனின் மேன்நிலைக்கேற்ப பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார். எனவே இம்மண்ணுலகத்தையே தகளியாகக் கொண்டார்; அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனையே அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார். அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் கருதியிருக்கும் ஆன்மாக்களுக்கு வீடுபேறளிக்கும் என்பது பொய்கையாரின் நம்பிக்கையாகும்"


2) இவரது 77ம் பாடலில் விண்ணகர் எனும் கோவில்  குறித்து ஒரு தகவல் வருகிறது. இஃது பரமேஸ்வர பல்லவனால் கட்டப்பட்ட "பரமேஸ்வர விண்ணகரம்" ஆகும், இப்பல்லவ மன்னன் 7ம் நூற்றாண்டின் இறுதியை சேர்ந்தவர், இதனை வைத்து முதலாழ்வார்களின் காலத்தினை சிலர் ஏழாம் நூற்றாண்டு என்கின்றனர். சம்பந்தர்பெருமான் பாடிய நிறைய தலங்கள் அவர்காலத்திற்கு குறைந்தது 200 வருங்கள் முன்புள்ள கோவில்களே. அக்கோவில்களை எவ்வாறு 7 ம் நூற்றாண்டு என ஏற்கவியலாதோ அதேபோல்தான், பொய்கையாழ்வார் பாடிய விண்ணகரகோவில், பிற்காலத்தில் பரமேஸ்வர பல்வனால் புணரமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும், பொய்கையாழ்வார், எவ்விடத்திலும் "பரமேஸ்வர விண்ணகரம்" என கூறவில்லை, மாறாய் விண்ணகரம் என்றே கூறுகிறார். இதிலிருந்து அவர் 7 ம் நூற்றாண்டிற்கு முற்ப்பட்டவரே என உறுதியளிக்கலாம்.


"வேங்கடமும் விண்ணகரும் வெகாவும், அகாத

பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், நான்கிடத்தும்

நின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,

என்றால் கெடுமாம் இடர்"


இதில் வரும் வெகா என்து திருவெஃகா ஆகும், இத்தலத்திலுள்ள பெருமாள் "சொன்னவண்ணம் செய்த பெருமாள்" என அழைக்கப்படுகிறார். இப்பகுதி இன்று "சின்ன காஞ்சிபுரம்" என பொதுவழக்கில் அழைக்கப்படுகிறது.


தமிழகத்தில் விண்ணகரம் என்ற பெயரில் ஆறுகோவில்கள் உள்ளன.


1.திருவிண்ணகர்(ஒப்பிலியப்பன் கோவில்)

2.காழீச்சிராம விண்ணகரம்(சீர்காழி)

3.நந்திபுரவிண்ணகரம்(நாதன் கோவில்)

4.அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

5.வைகுந்த விண்ணகரம்(திருநாங்கூர்)

6.பரமேஸ்வர விண்ணகரம்(காஞ்சி)


இக்கோவில்கள் பொய்கையாழ்வாருக்கு காலத்தால் பிற்ப்ப திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இந்த ஆறுகோவில்களும் பொய்கையாழ்வார் காலத்தில் எழுப்பப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. 

இதில் வேங்கடத்தில் நின்றகோலமாகவும், விண்ணகர் எனும் தலத்தில் அமர்ந்த கோலமாகவும், திருவெஃகாவில் கிடந்த கோலமாகவும், கோவலூரில் நடந்த கோலமாகவும் இருந்ததாய் பொய்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.


3)இன்றைய காலகட்டத்தில் வைதீக மதத்தின் ஆறு பிரிவுகள் இணைந்து, ஒருங்கிணைக்கப்பட்ட மதமாய் மாறிவிட்டது, ஆனால் மன்னர் காலம் வரையில் சைவ-வைணவ மோதல் ஆங்காங்கே நடைபெற்று இருந்ததது. பொய்கையாழ்வாரின் காலத்திலும் இச்சண்டை தொடர்ந்தது போலும், அரியும்-சிவனும் ஒன்றே எனும் கருத்தினை பொய்கையாழ்வார் கீழ்வரும் பாடலில் உணர்த்துகிறார்.


"பொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,

நின்றுலகம் தாய நெடுமாலும்,  என்றும்

இருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்

ஒருவனங்கத் தென்று முளன்"


பொன்னார்மேனியன் சிவனும், நின்றே உலகளந்த பெருமானும் ஈருடலில் உலாவினாலும், இருவரும் ஒருவரே என்கிறார்.


4)இறைவன் எங்கும் உள்ளவன், அவரை நினைத்து பார்த்தால் போதும், இதற்காக பாற்கடலுக்கோ, திருப்பதிக்கோ செல்லத் தேவையில்லை என அழகுதமிழில் பாடுகிறார். சில நாட்களுக்கு முன்புவரை திருப்பதியிலுள்ளது பெருமாள் அல்ல, மலைக்காளி, முருகர் என்ற கருத்துரை பரப்பப்பட்டது. பழம்பெரும் பொய்கையாழ்வாரே வேங்கடத்திலுள்ளவர் பெருமாள் என்கிறார், இது ஒன்று போதாதா? நிரூபிக்க,


"உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்

உளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத்  துளன்கண்டாய்,

வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,

உள்ளத்தி னுள்ளனென் றோர்"


இவர் ஆறு தலங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.


இவரது தோற்றம் மற்றும் மறைவு குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை, புராணகதைகள் அதிகம் நிறைந்த குருபரம்பரை கூறும் தகவல்களையே வைணவர்கள் ஏற்றுக்கொள்வர் அதன்படி,


"துலாயாம் ச்ரவணே ஜாதம் 

காஞ்ச்யாம் காஞ்சந வாரிஜாத்

த்வாபரே பாஞ்சஜந்யாம்சம் 

ஸரோயோகிந மாச்ரயே"


ஸ்ரீபாஞ்சஜந்ய அம்சத்தில், துவாபரயுகத்தில்,862901-வதான சித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதம் சுக்ல பட்சம் அஷ்டமி திதிசெவ்வாய்க்கிழமை கூடிய திருவோண நட்சத்திரத்தில், ஸர்வேஸ்வரனை பிரம்மா அஸ்வமேத யாகத்தால் ஆராதித்த இடமான காஞ்சிபுரத்தில், புண்ணியத்தை பெருக்கத் தக்க திருவெஃகாவில், யதோக்தகாரி ஸந்நிதிக்கு அடுத்த பொய்கை புஷ்கரணியில்விகஸித்த பொற்றாமரை மலரில், அயோநிஜராய் அவதரித்து, ஒப்பிலாத பகவத் பக்தியுடையவராய் எழுந்தருளியிருந்தார்.


பொய்கையாழ்வார் வரலாறு முற்றிற்று🙏🙏🙏




சங்க இலக்கியத்தில் திருமால்

 ஆழ்வார் காலம் முன்னுள்ள வைணவ மதம்:


ஆழ்வார்கள் பற்றி அறியும் முன், அவர்கள் காலத்திற்கு முன் நிலைபெற்ற வைணவ மதத்தினை பற்றி காண்போம். வைணவ மதத்தின் வரலாற்றினை

 1.தமிழகம் முழுவதும் உள்ள வைணவம்

 2.இந்தியா முழுவதும் வழக்கில் உள்ள வைணவம்

என இரு பெரும் பிரிவுகளாய் காணலாம், வட இந்திய இதிகாசங்கள், புராணங்கள் தவிர்த்து நாம் நம் தமிழ்மண்ணில் நிலைபெற்று விளங்கிய வைணவம் பற்றி அறிவதே இத்தொடரின் நோக்கம்.

“மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”


என்று ஐந்திணையில் உள்ள கடவுளரை குறித்து தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது. மாயோனின் பெயர்காரணத்தை ஆராய்ந்தோமானால்,

மா = கருப்பு. மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர். மால் = கருப்பு, மேகம், வானம், கரி யோன். முல்லைநிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது உயரிய அடையாளம்.


சங்க இலக்கியத்தில் திருமால்:


அகநானூறு, நற்றிணை, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் கிருஷ்ணர், பலராமர் இருவரையும் தனிப்பெரும் கடவுளராய் காட்டப்பட்டுள்ளனர். 

 முல்லைப்பாட்டில் "மால்" என்ற சொல்லும், மதுரைக்காஞ்சியில் "மாயோன்"  என்ற சொல்லும் பயின்று  வருகிறது,

"காந்தளஞ் சிலம்பில் நீடுகலைக் களிறுபடிதந்  தாங்குப் பாம்பணைப்  பள்ளி  அமர்ந்தோன்"

 என பாம்பின்மேலே பள்ளிக்கொண்ட பெருமாள் எனத்  திருமாலைப் போற்றுகிறது பெரும்பாணாற்றுப் படை.

 

 "வேத முதல்வன் என்ப

தீதுஅற விளங்கிய  திகிரி யோனே"


என்கிறார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

பின்னாட்களில் முல்லைநிலத்திற்குரிய கலுழனை(கருடனை)யும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய ஊர்தியாகவும் பூவாகவும் கொண்டார்கள்


இவ்வாறு சங்ககாலத்திற்கு முன்தோன்றிய மாயோன் வழிபாடு, சங்கம்மருவிய காலம் எனப்படும் சிலப்பதிகாரத்தில் அதன் நீட்சி அதிகம் காணப்படுகிறது. இக்காலமே ஆழ்வார்கள் தோன்றுவதற்கு முந்தைய காலநிலை எனலாம்.


பிற்சங்ககாலத்தில் திருமால்:


திருமாலின் அவதாரங்கள் பிற்சங்ககாலம் எனப்படும் பரிபாடலில் அதிகம் வருகிறது. பரிபாடல் காலத்தினை அறிஞர்கள் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர். இக்காலகட்டத்தில் விஷ்ணுவின் தசாவதார கதைகள் இலக்கியத்தில் முழுவதுமாய் எடுத்தாளப்பட்டது.


உதாரணமாய் பரிபாடலில் திருமாலின் வராக அவதாரத்தினை,


"கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய

ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு

ஊழி யாவரும் உணரா"

என்றும் கூர்ம அவதாரத்தை

"திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்

திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி

மகர மறிகடல் வைத்து நிறுத்துப்

புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்

அமுது கடைய இருவயின் நாண்ஆகி

மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க

உகாஅ வலியின் ஒருதோழம் காலம்

அறாஅது அணிந்தாரும் தாம்"


என கூறுவதிலிருந்து அறியலாம்.

இதுதவிர அழகர்கோவில் திருமாலை மக்கள் வழிபாடு செய்ததை பரிபாடல் எடுத்துகாட்டுகிறது.


கல்வெட்டுகளில் மகாபாரதம் குறித்த குறிப்புகள்:


இலக்கியங்கள் தவிர்த்து கல்வெட்டு ரீதியாய் தமிழகத்தில் காலத்தால் முற்ப்பட்ட ஆவணங்கள் மகாபாரதத்திற்கு இல்லை, எனினும் கர்நாடக மாநிலம் ஐய்கொளேவிலுள்ள கல்வெட்டு ஒன்று மகாபாரதம் நடந்த காலம் என ஒரு தகவலை தருகிறது.


சாளுக்கியத்தலைநர்

வாதாபி ( பதாமி)யிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள ஐகோளே என்னும் நகரத்தில் அமைந்த மேகுட்டி மலையில் உள்ள கோவிலின் கிழக்குச் சுவற்றில் இக்கல்வெட்டு உள்ளது.

இது நேமிநாதருக்கு எழுப்பப்பட்ட ஒரு ஜைனக்கோவிலாகும்


பல வரலாற்றுத்தரவுகளை ஒரு சரித்திரநூல் போல் இக்கல்வெட்டுத் தருகிறது.


சாளுக்கிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்ற இரண்டாம் புலிகேசியின் அரசவைக் கவிஞரான இரவிகீர்த்தி என்பவர் இக்கோவிலை எழுப்புகிறார்.


19 வரிகொண்ட கல்வெட்டு. பழைய தெலுங்கு - கன்னட எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.

.


சாளுக்கிய அரசர்களின் வம்சம். இரண்டாம் புலிகேசியின் கீர்த்தி மற்றும் பெருமை.

தனக்கு எதிராக சதி செய்த தன் சிற்றப்பன் மங்களேசனை கொன்று புலிகேசி ஆட்சிக்கு வந்தது. ஹர்சவர்த்தணரை வென்றது. பல்லவர்களை வென்றது. சேர சோழ பாண்டியர்களை காத்தது. போன்ற தரவுகள் இதில் உள்ளன.


கல்வெட்டுகளில் காணப்படும் வருடத்தை கணிக்கும் ஒரு மிக முக்கிய வருடக்கணிப்பு சகம் என்பதாகும். கல்வெட்டில் வரும் சகவருடத்துடன் 78 ஐ கூட்டினால் கிடைப்பது பொதுயுகம்.


ஐகோள் கல்வெட்டில் சகவருடம் 556 ல் இக்கோவில் கட்டப்பட்டதாக குறிப்பு உள்ளது.


ஆகையால்..

  556 + 78 = கி.பி.634.


கி.பி. 634 ம் ஆண்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.


சகவருடம் குறிப்பிடப்படும் முதல் கல்வெட்டு ஐகோளே கல்வெட்டே ஆகும்.


மேலும் ஒரு அவசியத்தகவலாக மகாபாரதப் போர் நடைபெற்ற காலமும், அதன் மூலம் கலிவருடம் என்னும் ஒரு ஆண்டு வரையறை செய்யவும் இக்கல்வெட்டுத் தரவுகள் உதவி புரிகின்றன.


கலிகாலம் தோன்றி மகாபாரதப்போர் நடந்து 3735 ஆண்டுகள் கடந்து, சகவருடம் 556 ஆண்டுகள் கடந்து இக்கோவில் எழுப்பப்படுகிறது.


சகவருடம் 556 என்றால் ( 556 + 78) கி.பி. 634.


கி.பி.634 என்பது பாரதப்போர் நடந்த கலியாண்டு 3735 ஆண்டுகள் கடந்து.


ஆகையால் 

கலி = 3735 - 634 = 3101.


ஆக.. கல்வெட்டுகளில் காணப்படும் கலி வருடத்திலிருந்து 3101 ஐ கழித்தால் கிடைப்பது பொதுயுகம்.


மேலும் ஒரு முடிவுக்கு வரலாம் இன்றிலிருந்து சரியாக 

5120 ( 3101 + 2019) ஆண்டுகளுக்கு முன் பாரதப்போர் நடைபெற்றுள்ளது.


அதாவது..

கலியாண்டு 5122க்கு சமமான ஆண்டு கி.பி.2021


இக்கல்வெட்டு விபரங்கள் எபிகிராபி இண்டிகா 6 ம் தொகுதி எண் 1 ல் காணலாம்.


முனைவர் க.சங்கரநாரயணன் அவர்களின் Sarasvatam இணையப்பக்கத்தில் தெளிவான தமிழ் மொழிப்பெயர்ப்புடன் காணலாம்..


கல்வெட்டுதரும் செய்திகளின் சுருக்கத் தொகுப்பு...

--------------------------------------

ஜினேந்திரர் வெல்கிறார். அவருடைய ஞானமாகிய கடலில் எல்லா உலகமும் தீவுகளைப்போல் இருக்கின்றன.


சாளுக்கியர்களின் குலமாகிய பெருங்கடல் வெல்கிறது. ஸத்யாச்ரயன் வெகுகாலம் வெல்கிறான்.


பூமிக்குத் தலைவன் என்னும் பொருளில் ப்ரூத்வி வல்லபன் என்னும் பெயருள்ள அரசபரம்பரையில் பல அரசர்கள் கடந்தப் பிறகு  ஜயஸிம்ஹ வல்லபன் சாளுக்ய அரசன் ஆனான். அவனுடைய மகன் ரணராகன். அவனுடைய மன் பொலகேசி ( முதலாம் புலிகேசி)


சந்திரனையொத்த தனது ஒளியினால் வாதாபி என்னும் மணமகளுக்கு கணவனாக திகழ்ந்தான்.


அவனுக்குப்பிறகு கீர்த்திவர்மன். பிறகு அவனது தம்பி மங்களேசன்.


அவனது தமையனின் மகனும் சீர்மை கொண்டவனுமான பொலகேசியை ( இரண்டாம் புலிகேசி) வீட்டுச்சிறையில் சிற்றப்பனான அவனே இருத்தி வைக்க முற்பட்டான்.


புலிகேசி எழுச்சிபெற்றப்போது மங்களேசன் தனது மகனுக்காக அரசை பெற முயற்சி செய்யும்போது தன்னுடைய உயிரை இழக்க நேர்ந்தது.


புலிகேசி, ஹர்சவர்த்தணரை வென்றான். மகாராஷ்டிரம், கோசலம், கலிங்கம் முதலியவற்றையும் வென்றான்.


பல்லவர்களின் தலைவனை காஞ்சி கோட்டையின் மதில்களுக்குள் ஒளிந்தவனாக ஆக்கினான்.


சோழர்களின் காவிரி நீர், புலிகேசியின் யானைகளால் ஒரு அணைபோல் தடுக்கப்பட்டதால், காவிரி கடலோடு கலக்கமுடியாமல் போயிற்று.


சோழ சேர பாண்டியர்களின் செழுமைக்கும், பல்லவர்களின் படையாகிய பனிக்கும் கதிரவன் ஆனான்.


மகாபாரதபோர் நிகழ்ந்து 3735 ஆண்டுகளுக்குப்பிறகு கலி காலம் தோன்றி சகவருடம் 556 ஆண்டுகள் கடந்தப்பிறகு ஸத்யாச்ரயன் அருளைப்பெற்ற இரவிகீர்த்தி என்பவரால் ஜினேந்ரருக்கு மலையை ஒத்தத் தளி எடுக்கப்பட்டது.



சங்ககாலம் தொடங்கி கி.பி 6ம் நூற்றாண்டு வரையிலும் செழித்த வைணவம்,அதன்பின் பாரதமெங்கும் கோலோச்சிய புறச்சமயங்களின் அலைகளில்  சிறிது தொய்வு ஏற்பட ஒருபுறம் இம்மதங்களால் பாதிப்படைந்த மற்றொரு மதமான சைவமும் கிளர்ந்தெழ, வைணவமும் ஆழ்வார்கள் மூலம் மீண்டும் எழுச்சி பெற்றது.இவர்களால் எழுச்சி பெற்றது மதம் மட்டுமல்ல. நம் தமிழும்தான். வைணவத்தை வளர்த்த பெரியோர்களை ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார் என கூறுவர். 


பின்பழகியபெருமாள் ஜீயர் இயற்றிய குருபரம்பரை கதைகளின்படி கொண்டால் ஆழ்வார்கள்  துவாரகாயுகத்திலும், கலியுகத்திலும் அவதாரம் மேற்கொண்டதாய் கூறுகிறது. ஆனால் இந்நூலுக்கு காலத்தால் முற்ப்பட்ட "திவ்யசூரி சரிதை"யில் ஆழ்வார்கள் காட்டப்படாமையால் ஆய்வாளர்கள் இக்கருத்துகளை ஏற்ப்பதில்லை. வரும் பகுதிகளில் ஆழ்வார்களின் சரியான காலநிலை குறித்தும்  தமிழும் மதமும் வளர்த்த அச்சான்றோர்கள் வரலாற்றினையும் அடுத்து காண்போம்.








மகாபாரத கல்வெட்டு



திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

  திருமங்கையாழ்வார்-07 திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்: உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பத...