திருமழிசை ஆழ்வார்-04

 திருமழிசை ஆழ்வார்-04


தொண்டை நாட்டு திருத்தலமான "திருமழிசை" எனும் ஊரில் தோன்றியவர் இவர். திருமாலினை நாள்தோறும் தவராமல் துதித்து வந்த பார்க்கவமுனிவருக்கும் அவரது மனைவிக்கும் மகனாய் பிறந்தவர் இவர், அதன்பின் தன் தந்தையாலேயே கைவிடப்பட்டு திருவாளர் என்பவரால் குழந்தைபருவத்தில் கண்டறியப்பட்டு வளர்க்கப்பட்டவர் இவர். இந்த திருவாளரது மகன் கணிகண்ணர் என்பவராவார். திருமழிசையாழ்வாரின் தொண்டராகவே அவருடன் பயணித்தார் கணிகண்ணர்.

216 பாசுரங்களை பாடியவர். அவை நான்முகன் திருஅந்தாதி (96 பாசுரங்கள்), திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்) என்று அழைக்கப் படுகின்றன. இவரை குறித்து சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது,


 முதலாழ்வார்கள் பாடிய தலங்களை தரிசித்துவிட்டு, திருக்குடந்தைக்கு செல்ல திட்டமிட்டிருக்கையில், திருவெஃவில் சில நாட்கள் தங்கியிருந்தார் அச்சமயம் இவருக்கு தொண்டாற்றிய கிழவி ஒருத்தியை குமரியாக்கினிர், ஊரே இந்த விஷயத்தை பரபரப்பாய் பேசியது. இவ்விடயம் கேள்விப்பட்ட அந்நகரத்து மன்னன், தனது வயோதிகத்தையும் போக்க, ஆழ்வாரை அழைத்துவர திருமழிசையான் தொண்டரான கணிகண்ணருக்கு ஆணையிட்டான், ஆனால் இதற்கு திருமழிசையார் இசையவில்லை, உடனே கடுஞ்சினம் கொண்ட மன்னன், இருவரையும் இந்நகரை விட்டு வெளியேற ஆணையிட்டான். ஆழ்வாரோ இந்நகரில் உள்ள பெருமாளையும், கணிகண்ணரையும் தன்னோடு அழைத்து நகரை விட்டு கிளம்பினார். பெருமாளே போனபின், அந்நகரில் வாசம் கொண்டிருந்த இன்னபிற தேவதைகளும், திருமகளும் கிளம்ப, நகரே வெறிச்சோடியது, தன்தவறை உணர்ந்து ஆழ்வாரிடம் சரணாகதி அடைய திருமழிசையாரும் மீண்டும் வந்து திருமாலை அந்நகரில் குடிபெயர்த்தினார்.அதன்பின் குடந்தையிலேயே நிரந்தரமாய் தங்கி, பதிகங்களை பாடி அங்கேயே பரமபதம் அடைந்தார்.


திருமழிசையாரின் காலநிலை:


திருமழிசையார் கதையில் வரும் அந்த மன்னரின் பெயர்  குறித்து குறிப்பில்லை. கி.மு விலிருந்தே காஞ்சி நகருக்கு குறிப்பில்லை, சங்ககாலத்தில் பல்லவரை பற்றி குறிப்பில்லை எனினும், லோகவிபாகம் எனும் திகம்பர சமணநூலில் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த சிம்மவிஷ்ணு குறித்த குறிப்புள்ளது. சிலர் முதலாழ்வார்களின் சமகாலத்தில் தோன்றியவரே திருமழிசையாழ்வார் எனும் கருத்தினை வைப்பர். முதலாழ்வார்கள் மூவரையும் திருவல்லிக்கேணியில் சந்தித்ததாய் கதை ஒன்று உண்டு.ஆனால் இவரது பாசுரம் ஒன்றில்,


"அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்

சிறியார் சிவப்பட்டார் செப்பில்  வெறியாய

மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்

ஈனவரே யாதலால் இன்று"


இவர் வாழ்ந்த காலத்தில்தான் சைவ, வைணவ விரிசல் அதிகமாக இருந்திருக்கிறது. பெளத்தமும், சமணமும் கூட சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டு இருந்திருக்கின்றன. இவையெல்லாம்

முதலாழ்வார்கள் காலத்தில் சிறிதும் காணமுடியாது. மேலும்,


"நாராயணன் என்னை யாளி நரகத்துச்

சேராமல் காக்கும் திருமால்தன் பேரான

பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு

ஆசைப்பட்டாழ்வார் பலர்"


என்றும் பாடுகிறார்.


காப்பு மறந்தறியேன்  கண்ணனே என்று இருப்பன்

ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்*  ஆக்கை

கொடுத்து அளித்த கோனே குணப்பரனேஉன்னை 

விடத்துணியார்மெய்தெளிந்தார் தாம்.


என்ற இந்தபாடலில் பயின்றுவரும் "கோன் குணபரனே" யார் என ஆய்ந்தால் அது முதலாம் மகேந்திரவர்மனை குறிக்கும் சொல்லாகும், இவரின் பல சிறப்புபெயர்களில் குணபரன் என்பதும் ஒன்று. எனவே திருமழிசையாரின் காலம் 7 ம் நூற்றாண்டின் முற்பகுதி என கூறலாம்.


திருமழிசையாரின் பதிகங்கள்:


வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி 

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் 


என்ற பாடலின்மூலம்,

வீடுபேறு அடையும் வழி தெரியாது உடலை வருத்தி, தவம்புரிந்து அலைந்து திரிய வேண்டாம். வீடுபேறு கொடுக்கவல்ல மெய்ப்பொருளும் வேதமுதற் பொருளும் விண்ணவர்க்கு நற்பொருளும் நாராயணன் தான்  என வழிகாட்டுகின்றார். 


கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனிகூன்

உண்டைகொண் டரங்கவோட்டி உள்மகிழ்ந்த நாதனூர்


கூனியின் முதுகின் மீது வில்லுண்டை எறிந்த நாதன் வாழ்கின்ற ஊர் திருவரங்கம் என்கிறார், மேலும் இலங்கைவேந்தன் இராவணனையும் ஸ்ரீரங்கத்துடன் தொடர்புபடுத்தி கீழ்க்கண்ட பாடலில் பாடினார்.


"சரங்களைத்து ரந்துவில்வ ளைத்துஇலங்கை மன்னவன்,

சிரங்கள்பத்த றுத்துதிர்த்த செல்வர்மன்னு பொன்னிடம்,

பரந்துபொன்நி ரந்துநுந்தி வந்தலைக்கும் வார்புனல்,

அரங்கமென்பர் நான்முகத் தயன்பணிந்த கோயிலே"


திருக்குறள் காலகாலமாய் நம் மண்ணில் நிலை கொண்டது என்பதற்கு திருமழிசையாரின் பதிகமும் ஓர் சான்று, திருவள்ளுவரின் அறத்துப்பாலில் வரும் விருந்தோம்பல் அதிகாரத்திலுள்ள குறளான, 


"வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்"


என்ற குறளை திருமழிசையார் நேரடியாய் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

திருமங்கையாழ்வார்-07 பகுதி 03

  திருமங்கையாழ்வார்-07 திருமங்கையாழ்வாரின் சிறப்பான பாசுரங்கள்: உயிர்களை கொடுமைபடுத்தாது, புறங்கூறாது நன்முறையில் வாழ்க்கை வாழவேண்டும் என்பத...